Published : 13 Feb 2025 12:20 AM
Last Updated : 13 Feb 2025 12:20 AM
செய்யாறு: பணக்கொழுப்பு அதிகம் உள்ளவர்களுக்கு தேர்தல் வியூகம் தேவைப்படுகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் பகுதியில் 2022-ல் நடந்த கூட்டத்தில் அவதூறாகப் பேசியது தொடர்பாக பிரம்மதேசம் காவல் நிலையத்தில் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்காக செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி பாக்கியராஜ் முன்னிலையில் சீமான் நேற்று ஆஜரானார். இவ்வழக்கை வரும் மார்ச் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: தமிழகத்தில் மக்களுடன் கூட்டணிவைத்து தேர்தல்களில் தனித்துப் போட்டியிடுகிறேன். ஈரோடு இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றிருக்கிறது. விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு தொடர்பான யூகங்களில் எனக்கு நாட்டமில்லை. ஏற்கெனவே நாட்டில் சிறப்பாக ஆட்சி புரிந்த முன்னோர்கள் எந்த வியூகமும் வகுக்கவில்லை. காமராஜர், அண்ணா போன்றவர்கள் வியூக வல்லுநர்கள் உதவியுடன் தேர்தலில் வெற்றி பெறவில்லை.
நாடு, மக்கள், நிலம் குறித்தெல்லாம் தெரியாமல் அரசியலுக்கு ஏன் வர வேண்டும்? எந்தெந்த தொகுதியில் யாரை நிறுத்தினால் வெற்றி பெறலாம் என்பதுகூட தெரியாதா? எனக்கு மூளை அதிகம் உண்டு. பணம்தான் இல்லை. எனவே, எனக்கு வியூக வல்லுநர் உதவி தேவையில்லை. பிரசாந்த் கிஷோருக்கு தமிழகத்தைப் பற்றி என்ன தெரியும். பணக்கொழுப்பு அதிகம் உள்ளவர்களுக்குத்தான் தேர்தல் வியூகமும் தேவைப்படுகிறது. வியூக வல்லுநர்கள் தேவைப்படுகிறார்கள். இவ்வாறு சீமான் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...