Published : 11 Feb 2025 04:30 PM
Last Updated : 11 Feb 2025 04:30 PM
ரயில் பாதை பராமரிப்பு பணி, மேம்பாட்டு பணி உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தப்பட்ட 50-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் பொதுபோக்குவரத்தின் இதயமாக புறநகர் மின்சார ரயில் சேவை உள்ளது.
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கம், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மார்க்கம், கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கம், கடற்கரை - வேளச்சேரி மார்க்கம் உள்ளிட்ட மார்க்கங்களை கொண்டுள்ளது. இந்த மார்க்கங்களில் தினசரி சராசரியாக 630 ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி 10 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.
வேலைநிமித்தமாகவும், உயர்படிப்புக்காகவும் புறநகரங்களில் இருந்து சென்னைக்கு வந்துசெல்லும் பயணிகளுக்கு இந்த ரயில் சேவைகள் பேருதவியாக இருக்கின்றன. இதற்கிடையே, ரயில் பாதை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணி நடைபெற உள்ளதாக கூறி, கடந்த ஆண்டில் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ஆகிய மார்க்கங்களில் 40-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இதுதவிர, தாம்பரம் ரயில்வே பணிமனை மேம்பாட்டுப்பணி காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக, வழக்கமாக இயக்கப்படும் மின்சார ரயில்களில் தினசரி காலை, மாலைவேளைகளில் கடும் கூட்டம் அலைமோதுகிறது. கூட்ட நெரிசலில் சிக்கி பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே, நிறுத்தப்பட்ட ரயில் சேவைகளை மீண்டும் இயக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து திருநின்றவூர் பயணிகள் நலச்சங்க செயலர் மூக்கையன் கூறியதாவது: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், இந்த மார்க்கத்தில் காலை, மாலை வேளைகளில் இயக்கப்படும் ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இரவு நேரத்தில் போதிய ரயில்கள் இல்லாததால், இரவு பணியை முடித்து வீட்டுக்கு வருவதில் மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
எனவே, ரத்து செய்யப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரியிடம் கேட்டபோது, “ரயில் பாதை உள்ளிட்ட பராமரிப்பு பணியால் நிறுத்தப்பட்ட மின்சார ரயில் சேவைகள் 2 மாதங்களில் மீண்டும் இயக்கப்படும்” என்றார்.
அதிகாலை 1.20 மணி ரயில்: சென்னை கடற்கரை - அரக்கோணத்துக்கு அதிகாலை 1.20 மணிக்கு ஒரு மின்சார ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலில் அம்பத்தூர், திருவள்ளூர் ஆகிய இடங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பணிப்பர். அதாவது துறைமுகம், அம்பத்தூர், புட்லூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் இரவுப் பணியை முடித்து வீட்டுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த ரயில் பேருதவியாக இருந்தது.
இந்த ரயில் சேவையும் ஓராண்டுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். இதனால், ரயில் நிலைய நடைமேடையில் தூங்கிவிட்டு, காலையில் இயக்கப்படும் முதல் ரயிலில் ஏறி வீட்டுக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே, இந்த ரயிலை மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment