Published : 10 Feb 2025 01:20 AM
Last Updated : 10 Feb 2025 01:20 AM

போக்குவரத்துக் கழகங்களில் தனியார்மயக் கொள்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் பிப்.13-ல் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்துக் கழகங்களில் தனியார்மயக் கொள்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் பிப்.13-ம் தேதி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இது தொடர்பாக சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் உள்ளடங்கிய போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் தொழிற்சங்க கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: போக்குவரத்துக் கழகங்களில் ஏற்படும் இழப்பை ஈடு செய்வது தொடர்பாக பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். கடந்த 21 மாதங்களாக ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் பணப்பலனை உடனடியாக வழங்க வேண்டும். முதலில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்தி, முடித்த பிறகு தொழிற்சங்கங்களின் அங்கீகார தேர்தலை நடத்தலாம். இதற்கிடையே, ஊதிய உயர்வின் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.

சொற்ப அளவில் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கியது ஏற்புடையதல்ல. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதோடு, காலிப்பணியிடங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்துவதற்கு பதில், அரசு தனியார்மய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தனியாருக்கு மினி பேருந்து அனுமதி வழங்கவும், ப்ரீமியம் சர்வீஸ் என்னும் பெயரில் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கும் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். போக்குவரத்துக் கழகங்களை சீர்குலைக்கும் தனியார்மய நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்.13-ம் தேதி அனைத்து மண்டலத் தலைமையகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். அன்றைய தினம் மாலை சென்னையில் விளக்கக் கூட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x