Published : 10 Feb 2025 01:17 AM
Last Updated : 10 Feb 2025 01:17 AM
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூடுகிறது.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜன.6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாததை காரணம் காட்டி உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற்றது. அந்த விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் 11-ம் தேதி பதில் அளித்தார். மொத்தம் 6 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.
இந்நிலையில், தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதுதொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. மேலும், தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படவுள்ள தொழில்கள், விரிவாக்கம் செய்யப்படவுள்ள தொழில்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment