Published : 09 Feb 2025 07:01 PM
Last Updated : 09 Feb 2025 07:01 PM
சென்னை: வரும் கல்வியாண்டில் 35.12 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: ''அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், அரசுப் பள்ளி, அரசு கலை, அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்டவற்றில் பயிலும் மாணவர்கள், அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கும் வகையில் ஸ்மார்ட் அட்டை வடிவிலான பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் நடப்பாண்டு 35.12 லட்சம் பஸ் பாஸ் தயாரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான ஒப்பந்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் ரூ.1.50 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. பிப்.17-ம் தேதியுடன் டெண்டர் முடிவடையும் நிலையில், தேர்வான நிறுவனத்திடம் மாணவர்களின் விவரங்களை வழங்கி விரைவில் அச்சிட்டு வழங்க அறிவுறுத்துவோம்.
தற்போது தோராயமாகவே மாணவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள அனைவருக்கும் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரம், மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே கட்டணமில்லா பயணத்தை அனுமதிக்க வேண்டும் எனவும் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.'' இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment