Published : 04 Feb 2025 06:10 AM
Last Updated : 04 Feb 2025 06:10 AM

அமைந்தகரை பகுதியில் தவெக கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி வழக்கு: 6 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவு

சென்னை: நடிகர் விஜய்-ன் தமிழக வெற்றிக் கழக கொடிகம்பம் அமைக்க அனுமதி கோரிய விண்ணப்பத்தின் மீது 6 வாரங்களில் முடிவெடுக்க சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அமைந்தகரை திருவீதி அம்மன் கோயில் தெருவில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி அளிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடக் கோரி, அக்கட்சியின் வழக்கறிஞர் அணி மாவட்டச் செயலாளரான சரத்குமார், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், திருவீதி அம்மன் கோயில் தெருவின் ஒரு பகுதியில் பல்வேறு கட்சிகளின் சார்பில் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், எங்கள் கட்சிக் கொடியை அமைக்க அனுமதி கோரி விண்ணப்பி்த்தும், எந்த பதிலும் இல்லை. எனவே, அந்த பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக் கம்பத்தை அமைக்க அனுமதிக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத், இதுதொடர்பாக மனுதாரர் இருவாரங்களில் மாநகராட்சியிடம் புதிதாக மனு அளிக்க வேண்டும் என்றும், அந்த விண்ணப்பத்தின் மீது 6 வாரங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x