Published : 02 Feb 2025 06:07 PM
Last Updated : 02 Feb 2025 06:07 PM
மதுரை: மதுரை- போடி மின் மயமாக்கல் பணி ஓரளவுக்கு நிறைவுற்ற போதிலும், ரயில்வே லைன் மேலே செல்லும் மின் கம்பிகள், உபகரணங்களில் குறைபாடுகளை கண்டறியும் விதமாக ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் இன்று நடந்தது.
மதுரை - போடி இடையேயான மீட்டர் கேஜ் ரயில் பாதை திட்டம் 2010 தொடங்கி நடந்தது. 2022-ம் ஆண்டு மே 26-ல் இப்பாதையில் மீண்டும் ரயில் ஒட தொடங்கியது. இதைதொடர்ந்து அதிகபட்சமாக மதுரையில் இருந்து தேனி வரையிலும் 100 கி.மீ வேகத்திலும், தேனியில் இருந்து போடிக்கு 90 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது. மதுரையில் இருந்து போடிக்கு 143 கிலோ மீட்டர் வழித்தடத்தில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்கி ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் டீசல் மூலம் இயக்கப்பட்ட மதுரை - போடி ரயிலை மின்சாரம் மூலம் இயக்க, மின்சார வழித் தடம் பணி தொடர்ந்து நடந்தது. பணி முடிந்த நிலையில் இவ்வழித்தடத்தில் 25 ஆயிரம் வோல்ட் மின் பாதையாக மாற்றப்பட்டு 4 மாதம் முன்பு அகல ரயில் பாதையில் 120 கி.மீ., வேகத்தில் ரயில் சோதனை ஓட்டமும் ஏற்கெனவே நடந்தது.
இதற்கிடையில், மதுரை - போடி இடையே ரயில் செல்லும் மின்வழித்தடத்தில் மேலே செல்லும் மின் இணைப்பு கம்பிகள் ஒரே சீராக இருக்கிறதா என்பதை அறியும் வகையிலும், உபகரணங்களில் குறைபாடு, ரயில் தாமதத்திற்கான காரணம் கண்டறிதல் ,சீரான மின்சாரம் வழங்கும் பேன்டோகிராப் கொண்டு மின் இணைப்பு பொருத்தப்பட்ட ஓவர் ஹெட் எக்யூப்மென்ட் இன்ஸ்பெக்சன் கார் ஆய்வுக்கான ரயில் சோதனை ஓட்டம் இன்று நடந்தது. பொறியியல் பிரிவு துணை பொதுமேலாளர் தாமரைச்செல்வம், நிர்வாக பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...