Published : 02 Feb 2025 09:44 AM
Last Updated : 02 Feb 2025 09:44 AM

ஆட்டோ ஓட்டுநர்களால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் அமல்!

சென்னை: ஆட்டோ ஓட்டுநர்களால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.

கடந்த 2013ம் ஆண்டு ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு மாற்றியமைத்தது. அதன்பின் தனி நபர் ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதின்றம், 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து பல கட்ட பேச்சுவார்த்தையை நடத்திய அரசு, 2 ஆண்டுகளை கடந்த பிறகும் கட்டணத்தை உயர்த்தவில்லை. இந்த சூழலில், பிப்.1ம் தேதி முதல் புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என ஆட்டோ ஓட்டுநர்கள் அறிவித்தனர்.

அதன்படி, முதல் 1.8 கி.மீ-க்கு ரூ.50, கூடுதலான ஒவ்வொரு கி.மீ-க்கும் ரூ.18, காத்திருப்பு கட்டணம் நிமிடத்துக்கு ரூ.1.50, இரவு நேரத்தில் (இரவு 11 முதல் அதிகாலை 5 மணி) பகல் நேர கட்டணத்தில் 50 சதவீதம் அதிகம் என்ற விகிதப்படி நேற்று முதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதே நேரம், பன்னாட்டு போக்குவரத்து நிறுவனங்களின் கீழ் வாடகைக்கு வாகனங்களை இயக்க மாட்டோம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, குறிப்பிட்ட நிறுவனங்களைத் தவிர்த்து கமிஷன் தொகையை கணிசமாக வழங்கும் வேறு நிறுவனங்களின் கீழ் ஓட்டுநர்கள் ஆட்டோ, டாக்சிகளை இயக்கினர். ஆட்டோ ஓட்டுநர்கள் தரப்பில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 என நிர்ணயித்திருக்கும் நிலையில், குறிப்பிட்ட பன்னாட்டு போக்குவரத்து நிறுவனம் சார்பில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.60 என அறிவிக்கப்பட்டது.

இதற்கு ஓட்டுநர்கள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, விரைவில் அரசு சார்பில் கட்டணம் அறிவிக்கும் வகையில் போக்குவரத்துத் துறையுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு வரும் என ஓட்டுநர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x