Published : 01 Feb 2025 09:01 AM
Last Updated : 01 Feb 2025 09:01 AM
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்தானதற்கு திமுக, பாஜக, அதிமுக என போட்டிபோட்டு பாராட்டு விழாக்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் திட்டத்துக்கு அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து, சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர், “நான் முதல்வராக இருக்கும் வரை இந்தத் திட்டத்தை வரவிடமாட்டேன்” என அறிவித்தார். அதிமுக-வும் இந்தத் திட்டத்துக்கு எதிராக பேரவையில் குரல் கொடுத்தது. களத்துக்கு வந்து மக்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், “டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக நல்ல முடிவை மத்திய அரசு அறிவிக்கும்” என, உறுதியளித்தார்.
இந்நிலையில் ஜனவரி 21-ம் தேதி, அண்ணாமலை மற்றும் மாநில பாஜக பொதுச் செயலாளர் இராம.சீனிவாசன் தலைமையிலான பாஜக-வினர் விவசாயிகளை டெல்லிக்கே அழைத்துச் சென்று மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிசன் ரெட்டியை சந்தித்தனர். இந்தச் சந்திப்புக்குப் பிறகே திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
இதற்கிடையில் டங்ஸ்டன் திட்டம் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் சிலரை அமைச்சர் பி.மூர்த்தி சென்னைக்கு அழைத்துச் சென்று முதல்வரை சந்திக்க வைத்தார். அப்போது அவர்கள், முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் அவர்கள், டங்ஸ்டன் திட்டம் ரத்துக்கு காரணமாக இருந்தமைக்காக ஊரில் பாராட்டுவிழா நடத்துவதாக முதல்வருக்கு அழைப்பு விடுத்தனர். இதன்பேரில் ஜனவரி 27-ல் முதல்வர் அரிட்டாபட்டி, ஏ.வல்லாளப்பட்டிக்கு சென்று பாராட்டு விழாவில் பங்கேற்றார்.
திமுக-வைத் தொடர்ந்து மதுரை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ராஜன் செல்லப்பா மேலூர் பகுதி விவசாயிகள் சிலரை சென்னைக்கு அழைத்துச் சென்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்திக்க வைத்தார். அப்போது, டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய குரல் கொடுத்தமைக்காக பழனிசாமிக்கு நன்றி தெரிவித்த அவர்கள், பாராட்டு விழாவுக்கு வரும்படி அவரையும் மேலூருக்கு அழைத்துள்ளனர். இதையெல்லாம் பார்த்துவிட்டு பாஜக தலைவர் அண்ணாமலையும் மத்திய அமைச்சர் கிசன் ரெட்டியை 30-ம் தேதி ஏ.வல்லாளப்பட்டிக்கு அழைத்து வந்து பாராட்டு விழா நடத்தினர்.
இப்படி முக்கிய கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு டங்ஸ்டன் திட்டம் ரத்தானதற்கு பாராட்டு விழா எடுப்பது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்த பாராட்டு விழாக்கள் டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து உண்மையிலேயே போராடிய மக்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளதாக மேலூர் பகுதி மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம. சீனிவாசன், “டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அரசாணை வந்தபோது, திமுக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திட்டம் குறித்து மாநில அரசிடம் கேட்டபோதும், 5 ஆயிரம் ஏக்கர் தேவை என்ற போதிலும் மறுக்கவில்லை. 400 ஏக்கரில் பல்லுயிர் தளம், உயிர் பன்மை சூழல் இருக்கிறது என மட்டுமே அரசு கூறியது.
மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி மாநில அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி நாங்களும் டங்ஸ்டனை எதிர்க்கிறோம் என காட்டிக்கொண்டனர். டங்ஸ்டன் திட்டம் ரத்தானது திமுக-வால் அல்ல. இது விஷயமாக நாங்கள் சுரங்கத்துறை அமைச்சர் கிசன் ரெட்டியை சந்தித்து விளக்கியபோது, ‘உங்கள் மாநில அரசு என்ன செய்கிறது? எங்களிடம் ஏலம் எதிர்ப்பு குறித்து சொல்லவில்லை. விவசாயிகளுக்கு அதிருப்தி இருப்பது பற்றி கூறவில்லை.
கடந்த பிப்ரவரியிலும், நவம்பரிலும் மறுஏலம் விட்டபோதும் ஏன் சொல்லவில்லை? அரிய வகை உயிரினம், கல்வெட்டு, தொல்லியல் பொருட்கள், 250 கோயில்கள் இருக்கின்றன என்ற தகவல்களை எல்லாம் மாநில அரசு மறைத்துவிட்டது. மத்திய அரசு விவசாயிகள், மக்கள் பக்கம் இருக்கும். பிரதமரிடம் பேசி திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என அமைச்சர் உறுதியளித்தார்.
இதற்கு அடுத்த நாளே டங்ஸ்டன் திட்டம் ரத்து உத்தரவு வெளி வந்தது. ஆனால், டங்ஸ்டன் திட்டம் ரத்துக்கு காரணம் நாங்கள் தான் என, சொல்லிக்கொண்டு அரிட்டாபட்டிக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிமை கொண்டாடுகிறார். பேரவையில் சிறப்பு தீர்மானம் போட்டதால் மத்திய அரசு பணிந்தது என்கிறார்.
அப்படியெனில், நீட் தேர்வுக்கு எதிராக போட்ட சிறப்பு தீர்மானத்திற்கு ஏன் பணியவில்லை? யார் பிள்ளை பெற்றாலும், நாங்கள் தான் இனிஷியல் போடுவோம் என்பதே இன்றைய தமிழக ஆட்சி அணுகுமுறையாக உள்ளது. இது தவறான போக்கு. நீங்கள் செய்த வேலைக்கே கிரெடிட் எடுக்கவேண்டும். செய்தது எல்லாமே பாஜக. அதற்குரிய பெயர், புகழை நீங்கள் எடுத்துக்கொள்வதை கண்டிக்கிறோம்” என்றார். இன்னும் எத்தனை பேர் பாராட்டு விழா நடத்தப் போகிறார்களோ!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...