Published : 01 Feb 2025 07:25 AM
Last Updated : 01 Feb 2025 07:25 AM
சென்னை: விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, அதிமுகவில் இருந்து விலகிய சிடிஆர்.நிர்மல்குமார் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அவர்களுக்கு தவெகவில் புதிய பொறுப்புகளை வழங்கி நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட 120 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், இரண்டு கட்டங்களாக 38 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், 3-ம் கட்ட புதிய நிர்வாகிகள் நியமனம் சென்னை பனையூரில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் தலைவர் விஜய் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு நியமன கடிதத்தை வழங்கினார்.
இந்நிலையில், விசிகவில் துணை பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் ஆர்ஜுனா, அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில், நேற்று அவர் விஜய்முன்னிலையில் தவெகவில் இணைந்தார். இவரைத் தொடர்ந்து, அதிமுகவில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளராக இருந்த சிடிஆர் நிர்மல் குமாரும் நேற்று தவெகவில் இணைந்தார்.
இதன்படி தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுனாவும், தகவல் தொழில்நுட்ப துணைப் பொதுச் செயலாளராக சிடிஆர். நிர்மல்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர தலைமை கழக இணைப் பொருளாளராக பி.ஜெகதீஷ், கொள்கைப் பரப்புச் செயலாளராக ஏ.ராஜ்மோகன், கொள்கைபரப்பு இணைச் செயலாளர்களாக லயோலா மணி, ஏ.சம்பத்குமார், ஜெ.கேத்ரின் பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், செய்தித் தொடர்பாளராக எஸ்.வீரவிக்னேஷ்வரன், இணைச் செய்தி தொடர்பாளர் எஸ்.ரமேஷ், ஐடி பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஜெயபிரகாஷ், இணை ஒருங்கிணைப்பாளர்களாக ஏ.குருசரண், ஆர்.ஜெ.ரஞ்சன் குமார், சமூக ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆர்.குருமூர்த்தி, இணை ஒருங்கிணைப்பாளர்களாக
ஆர்.ராம்குமார், பி.வெங்கடேஷ், ஆர்.நிரேஷ்குமார், எஸ்.அறிவானந்தம், ஆர்.விஷ்ணு, ஏ.ப்ளோரியா இமாக்குலேட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியுடன் இணைந்து, அவரது அரசியல் வியூகங்களைப் பின்பற்றி, தேர்தல் பிரச்சாரங்களை வடிவமைத்து, தேர்தல் மேலாண்மை பணிகளை ஆதவ் அர்ஜுனா மேற்கொள்வார் என விஜய் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment