Published : 31 Jan 2025 07:34 PM
Last Updated : 31 Jan 2025 07:34 PM
ராமேசுவரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறப்பதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளன. பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்பட்டது மட்டுமின்றி பாலத்தில் விரிசல் விழுந்ததாலும், இந்த பாலம் அருகிலேயே புதிய ரயில் பாலம் கட்டும் பணிளுக்கு 01.03.2019-ல் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டப்பட்டு, ரூ.535 கோடி மதிப்பில் பணிகள் துவங்கின. புதிய ரயில் பாலம் பாலத்தின் 2078 மீட்டர் நீளமும், கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரம் கொண்டது. 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்களும், 99 இணைப்பு கர்டர்களையும் கொண்டது. பாலத்தின் ஆயுட்காலம் 58 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பாலத்தில் நடுவே அமைக்கப்பட்டிருக்கும் செங்குத்து தூக்குப் பாலம் இந்தியாவிலேயே முதல் செங்குத்து தூக்குப் பாலம் ஆகும். புதிய பாம்பன் ரயில் பாலத்தில் ரயில்கள் சோதனை ஓட்டம், செங்குத்து தூக்குப் பாலத்தை தூக்கி இறக்கும் சோதனைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்து, கடந்த நவம்வர் மாதம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் சில குறைபாடுகளை சுட்டிக்காட்டி அவற்றை சரி செய்த பின்னரே ரயில் புதிய பாம்பன் ரயில் பாலம் வழியாக ராமேசுவரத்திற்கு இயக்க வேண்டும், என ஆணையர் ஏ.எம். சவுத்ரி தெரிவித்திருந்தார்.
தற்போது, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், அவர் சுட்டிக்காட்டிய பணிகளும் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் இன்று, பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறப்பதற்கான ஆயத்த பணிகள் தொடங்கின. பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலத்தில் உள்ள செங்குத்து தூக்குப்பாலமும், பழைய ரயில் பாலமும் ஒரு சேர தூக்கப்பட்டு, வடக்கே பாக் ஜலசந்தி கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து படகு வடக்கே மன்னார் வளைகுடா கடற்பகுதிக்கு கடந்து சென்றது.
தொடர்ந்து, பாம்பன் புதிய ரயில் பாலத்தின் செங்குத்து தூக்குப் பாலம் இறக்கப்பட்டு பயணிகள் இன்றி 22 காலி பெட்டிகளுடன் ரயில் என்ஜின் மண்டபத்திலிருந்து ராமேசுவரத்திற்கு பாலம் வழியாக இயக்கி சோதனை செய்யப்பட்டது. பின்னர், மீண்டும் செங்குத்து ரயில் தூக்குப் பாலம் தூக்கப்பட்டு வடக்கே மன்னார் வளைகுடா கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்ப்பட்டிருந்த அதே கடலோர காவல்படையின் ரோந்து படகு மீண்டும் பாக் ஜலசந்தி கடற்பகுதிக்கு கடந்து சென்றது. அது போல, மீண்டும் பாம்பன் செங்குத்து தூக்குப் பாலம் மூடப்பட்டு ராமேசுவரத்தில் இருந்து பயணிகள் இன்றி 22 காலி பெட்டிகளுடன் ரயில் என்ஜின் மண்டபம் நோக்கி இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ''புதிய பாம்பன் ரயில் பாலத்தின் திறப்பு விழா விரைவில் நடைபெறும். பிரதமர் நரேந்திர மோடி பாலத்தை திறந்து வைப்பார். இதற்கான தேதியை விரைவில் ரயில்வே அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். இதற்கான ஆயத்த பணிகள் தான் தற்போது தொடங்கி உள்ளன. பாம்பன் ரயில்வே பாலத்தை தக்கவைத்துக்கொள்வது அல்லது அகற்றுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்,'' என தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment