Published : 31 Jan 2025 03:53 PM
Last Updated : 31 Jan 2025 03:53 PM
மதுரை: மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ததற்காக உண்மையான பாராட்டு பெற தகுதியானவர்கள் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மட்டுமே என பாராட்டு விழாவில் மக்கள் புகழாரம் சூட்டினர். டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்டதற்காக மத்திய கனிம வளத்துறை அமைச்சர் கிஷன்ரெட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு அ.வல்லாளபட்டியில் பொதுமக்கள் சார்பில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இவ்விழாவில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டியும், பாஜக மாநில தலைவர் அண்ணா மலையும் நேற்று மாலை சென்னையில் இருந்து விமானத்தில் வந்தனர். மதுரை விமான நிலையத்தில் இருவரையும் பாஜகவினர் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். பின்னர் இருவரும் ஒரே காரில் வல்லாளபட்டிக்கு புறப்பட்டனர்.
பெருங்குடியில் மதுரை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சிவலிங்கம் தலைமையிலும், கடச்சனேந்தல், அழகர்கோயில் கோட்டை வாசலில் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜ சிம்மன் தலைமையிலும் இருவருக்கும் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இருவரும் வல்லாளபட்டிக்கு சென்றனர். அங்கு பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு பெரிய அம்பலகாரர் மகாமுனியும், மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு சேதுராமன் அம்பலகாரரும் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளும் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினர். பாராட்டு விழாவில் கிராமத்தினர் வரவேற்று பேசுகையில், டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதால் மேலூர் பகுதி மண்ணும், மக்களும் பாதுகாக்கப் பட்டுள்ளனர்.
இதனால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி கடலில் திளைக்கிறோம். இந்த சாதனையை நிகழ்த்திய பிரதமர் மோடிக்கு நெஞ்சார நன்றி தெரிவிக்கிறோம் என்றனர். அவர்கள் மேலும் பேசும்போது, இங்கு வெற்றி வீரராக வந்திருக்கும் அண்ணாமலை, மனவேதனையுடன் இருந்த எங்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று மத்திய அமைச்சரை சந்திக்க வைத்தார். பிரதமர் மோடியின் ஒப்புதல் பெற்று திட்டத்தை ரத்து செய்ய வைத்தார்.
எங்கள் முன்னோர்களால் பாதுகாக்கப்பட்ட மண்ணும், குலசாமியும் அண்ணாமலையால் பாதுகாக்கப்பட்டுள்ளது. திட்டத்தை ரத்து செய்ய பல்வேறு அரசியல் கட்சிகள் முயற்சித்த போதிலும் இதில் சாதித்து காட்டியவர் அண்ணாமலை மட்டுமே. அதற்குத்தான் இந்த நன்றி தெரிவிக்கும் விழா. இவ்விழாவுக்கு முற்றிலும் பொருத்தமானவர்கள் இந்த இருவர்தான் என்றனர்.
மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி பேச்சை தொடங்கும்போது, மதுரை மக்களுக்கு என் அன்பான வணக்கம். இன்று மதுரை மீனாட்சி பட்டணத்தில் இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என தமிழில் பேசினார். பின்னர் பேச்சின் போதும் ஆங்கிலம் மற்றும் தமிழில் பேசினார்.மத்திய அமைச்சரின் ஆங்கில பேச்சை தமிழக பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் தமிழில் மொழிபெயர்த்தார்.
புறநகர் மாவட்ட தலைவர் ராஜசிம்மன், மாநகர் மாவட்டத் தலைவர் மாரி சக்கரவர்த்தி, மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம், மாநகர் மாவட்ட முன்னாள் தலைவர் மகா சுசீந்திரன், பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அ.வல்லாளபட்டி பாராட்டு விழா முடிந்ததும் மத்திய அமைச்சர் அங்கிருந்தபடி விமான நிலையம் சென்றார். அண்ணாமலை அரிட்டாபட்டி சென்றார். அங்கு அவர் பேசும்போது, உண்மையான வெற்றிக்கு சொந்தக்காரர்கள் அரிட்டாபட்டி மக்களும், சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள்தான். நீங்கள்தான் சாமி, நாங்கள் சூடம். இந்த மண்ணைக் காக்கும் சாமி நீங்கள்தான். அரிட்டாபட்டியில் 10 நாள் முகாமிட்டு மத்திய அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களுக்கு கிடைக்கச் செய்வேன் என்றார்.
- கி.மகாராஜன்/சுப.ஜனநாயகசெல்வம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...