Published : 31 Jan 2025 05:48 AM
Last Updated : 31 Jan 2025 05:48 AM
சென்னை: ரயில் திட்டங்களை செயல்படுத்துதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், ரயில் வழித்தடத்தில் வேகத்தை அதிகரித்தல் ஆகியவற்றில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.
தெற்கு ரயில்வேயின் 69-வது ரயில்வே வார கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ரயில் சேவைக்கான சிறப்பு விருது வழங்கும் விழா சென்னை சென்னை ஐ.சி.எஃப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
விழாவில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங், தலைமை வகித்து, பல்வேறு ரயில்வே கோட்டங்கள், பல்வேறு ரயில்வே துறைகள், பணிமனைகளில் சிறப்பாகச் செயல்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கேடயங்கள், விருதுகளை வழங்கினார்.
விழாவில், பொது மேலாளர் ஆர்.என். சிங், ரயில்வேயின் வளர்ச்சி மற்றும் செயல்திறனுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதற்காக விருது பெற்றவர்களை பாராட்டினார். ரயில்வே கோட்டங்கள் மற்றும் பணிமனைகளின் ஊழியர்களின் சிறப்பான செயல்பாட்டிற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் அவர் பேசுகையில்,"திட்டங்களை செயல்படுத்துதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், ரயில் வழித்தடத்தில் வேகத்தை அதிகரித்தல், நவீன பெட்டிகளை அறிமுகப்படுத்துதல்,
பயணிகள் வசதிகள் மற்றும் உள் சேவைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் தெற்கு ரயில்வே முன்னணியில் இருக்கிறது" என்றார். விழாவில், தெற்கு ரயில்வேயின் 2024-ம் ஆண்டு சாதனைகளை விளக்கும் ஒரு குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.
தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர், பணியாளர் நல முதன்மை தலைமை அதிகாரி ஹரிகிருஷ்ணன் உள்படபலர் கலந்து கொண்டனர்.
பொது மேலாளருக்கான ஒட்டுமொத்த திறன் கேடயத்தை திருச்சிராப்பள்ளி கோட்டம் வென்றது. பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்கள் இரண்டாம் இடத்தைப் பிடித்தன.
ரயில்வே பணியின் பல்வேறு பகுதிகளில் சிறந்த செயல்திறனுக்காக 38 திறன் கேடயங்கள் வெவ்வேறு கோட்டங்கள், பணிமனைகளுக்கு வழங்கப்பட்டன. 26 அதிகாரிகள் மற்றும் 71 ஊழியர்கள் உட்பட மொத்தம் 97 தெற்கு ரயில்வே ஊழியர்களுக்கு 'தனிநபர் விருதுகள்' வழங்கப்பட்டன.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் சிறந்து விளங்கிய ரயில்வே பள்ளிகளைச் சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கும் தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment