Published : 31 Jan 2025 06:30 AM
Last Updated : 31 Jan 2025 06:30 AM
சென்னை: குடியரசு முன்னாள் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடுவின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார். அவருக்கு தமிழக பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு்ள்ளது.
குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பேரன் திருமண விழா மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார். இதையொட்டி, பாஜக சென்னை பெருங்கோட்டம் சார்பில் விமான நிலையத்தில் அமித் ஷாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு பொறுப்பாளர்களாக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், மாநில விளையாட்டுப்பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ஆகியோரை மாநில தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார்.
பரதநாட்டியம், பறை இசை, செண்டை மேளம், சிவ வாத்தியம், கரகாட்டம், ஒயிலாட்டம், சென்னை கானா, திருநங்கைகள் நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பாஜகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதுதொடர்பாக, பொறுப்பாளர்களுடன் அண்ணாமலை நேற்று ஆலோசனை நடத்தினார்.
குடியரசு துணைத் தலைவர்: வெங்கய்ய நாயுடு இல்ல திருமண விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொள்கின்றனர்.
ட்ரோன் பறக்க தடை: சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் ஜன.31-ம் தேதி (இன்று) சென்னைக்கு வருகை தந்து, முட்டுக்காடு மற்றும் மாமல்லபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். எனவே, 31-ம் தேதி சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட, சென்னை விமான நிலையம், ராஜ் பவன், விவிஐபி பயணிக்கும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதிகளில் ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோலைட் ஏர்கிராப்ட், பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேன்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவைபறக்க விட தடை விதிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈசிஆரில் போக்குவரத்து தடை: குடியரசு துணை தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் வருகையையொட்டி இன்று மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை கிழக்கு கடற்கரை சாலையை (ஈசிஆர்) பொதுமக்கள் பயன்படுத்த போலீஸார் தடை விதித்துள்ளனர். எனவே, சென்னை விமான நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை செல்லும் வாகனங்கள், பழைய மாமல்லபுரம் சாலையை (ஓஎம்ஆர்) மாற்றுப்பாதையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...