Published : 30 Jan 2025 04:34 PM
Last Updated : 30 Jan 2025 04:34 PM
ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேர் தாயகம் திரும்பினர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற முகேஷ்குமார், மரிய ரெட்ரிக்ஷன் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு படகுகளில் களங்சியம், முனிஸ்வரன், கார்மேகம், கண்ணன், பிரியன், சவேரியார் அடிமை, மரிய ஜான் ரெமோரோ. பிரிஸ்மன் ஆகிய 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஜனவரி 12-ம் தேதி சிறைப்பிடிக்கப்பட்டனர்.
8 மீனவர்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஜனவரி 22-ம் தேதி கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜமீல், 8 மீனவர்களின் 2 விசைப்படகு ஓட்டுநர்களுக்கு தலா இலங்கை ரூ. 60 லட்சம் அபராதம் அல்லது ஆறு மாதம் சிறை தண்டனையும், மற்ற 6 மீனவர்களுக்கு தலா இலங்கை ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் 6 மீனவர்கள் மட்டும் அபராதத் தொகையை கட்டி விடுதலையடைந்ததால், புதன்கிழமை இரவு கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னை வந்தடைந்தனர். தொடர்ந்து மீனவர்கள் தனி வாகனம் மூலம் ராமேசுவரத்திற்கு வியாழக்கிழமை அழைத்து வரப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment