Published : 30 Jan 2025 02:51 AM
Last Updated : 30 Jan 2025 02:51 AM

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத பகுதி சென்னை என பெற்றோர் அச்சம்: ஆளுநர் ஆர்.என்​.ரவி கருத்து

அனைவரும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

புதுதில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அரசு சாரா அமைப்பான இந்திய மகளிர் சங்கத்தின் மாநாடு, காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள பொடவூர் பகுதியில் உள்ள பிரம்மா குமாரிகள் அமைப்பின் பயிலரங்கத்தில் நடைபெற்றது.

இந்த மாநாட்டுக்கு அமைப்பின் தலைவர் பத்மா வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். செயலர் சாந்தி சாக்கரடீஸ் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தமிழக ஆளுநர் ஆர்.ரவி பேசியது:

தற்போது பெண்கள் அதிக அளவில் கல்வி கற்று பட்டங்களை பெறுகின்றனர். பல இடங்களில் பதக்கங்களைக் கூட பெறுகின்றனர். ஆண்களை விட பல்வேறு இடங்களில் கல்வியில் சிறந்து விளங்கினாலும், வேலைவாய்ப்பில் எதிர்பார்த்த அளவு அவர்களின் பங்களிப்பு இல்லை. பெண்கள் அனைத்து துறைகளிலும் அதிக அளவு பங்கேற்க வேண்டும். நாம் அனைவரும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவர்கள் தற்போது பல துறைகளில் வரத் தொடங்கியுள்ளனர். அதிக அளவில் வர இது உதவியாக இருக்கும் என்றார்.

இந்திய மகளிர்கள் சங்கம் என்பது புதுதில்லியில் உள்ள ஓர் அரசு சாரா அமைப்பு (என்.ஜி.ஓ) ஆகும். இந்த அமைப்பு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி முயற்சிகலை மேம்படுத்த 1927-ல் நிறுவப்பட்டது. இந்த அமைப்பின் 93-வது அகில இந்திய மாநாடு தமிழ்நாட்டில் நடத்த திட்டமிடப்பட்ட சுங்குவார்சத்திரம் பிரம்மாகுமாரிகள் சங்க பயிலரங்கில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டு மலரையும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x