Published : 28 Jan 2025 06:10 AM
Last Updated : 28 Jan 2025 06:10 AM
சென்னை: சாலையில் மயங்கி விழுந்த சிறுவனை பார்த்த சுகாதார துறை அமைச்சர், அந்த சிறுவனை உடனடியாக மீட்டு எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தார்.
சென்னை சைதாப்பேட்டை சிஐடி நகரை சேர்ந்த தியாகராஜன் - கலைவாணி தம்பதியின் 5 வயது சிறுவன் விஷ்ரூத், நேற்று காலை 8:40 மணியளவில் வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். அப்போது, நடைபயிற்சி முடித்துவிட்டு அவ்வழியாக வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதைப் பார்த்தார்.
உடனடியாக அவரது வாகனத்திலேயே சிறுவனை ஏற்றி எழும்பூர் அரசு குழந்தை நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதில், சிறுவனுக்கு இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனை கேள்விப்பட்ட அமைச்சர், சிறுவனின் இதய பாதிப்புக்கான அனைத்து சிகிச்சைகளையும் அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். பெற்றோரிடம் சிறுவனின் தற்போதைய நிலையை கூறிய மருத்துவர்கள், சிறுவனின் உடல்நிலையை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT