Published : 25 Jan 2025 08:46 PM
Last Updated : 25 Jan 2025 08:46 PM

“தமிழகத்தின் நிலை கவலைக்கிடம்” - குடியரசு தின செய்தியில் ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்வது என்ன?

ஆளுநர் ஆர்.என்.ரவி | கோப்புப்படம்

சென்னை: “தேசியக் குறிக்கோளில், நமது மாநிலமான தமிழகத்துக்கு ஒரு பெரிய பங்களிப்பு இருக்கிறது. ஆனால், இது நடப்பது போலத் தெரியவில்லை. முக்கியமான குறியீடுகளில் தமிழகத்தின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. துரதிருஷ்டவசமாக, நமது மாநிலம் சரிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது குடியரசு தினச் செய்தியில் கூறியுள்ளார்.

குடியரசு தினத்தையொட்டி, தமிழக மக்களுக்கு ஆளுநர் விடுத்துள்ள செய்தி: “தமிழக சகோதர சகோதரிகளே, வணக்கம். பாரதக் குடியரசு தன்னுடைய நிறைவான பயணத்தின் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த தருணத்தில் நான் என்னுடைய மனம் கனிந்த வாழ்த்துக்களையும், நல்விருப்பங்களையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 75 ஆண்டுகளில், நமது அண்டை நாடுகள் உட்பட, உலகின் பல்வேறு நாடுகளில் ஒன்றன் பின் ஒன்றாக ஜனநாயகம் நிலைகுலைவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனாலும் கூட, நமது ஜனநாயகம் மேலும் பலமுடையதாகவும், முதிர்ச்சியுடையதாகவும் காலப்போக்கில் வளர்ந்து வந்திருக்கிறது. ஜனநாயக உணர்வு நமது மக்களிடம் ஊறிப்போயிருக்கிறது. பாரதம் தான் ஜனநாயகத்தின் தாய்நாடு.

தமிழின் ஆன்மிக, கலாச்சார மற்றும் மொழி பாரம்பரியம் தான் நமது தேசத்தின் பெருமிதம். நாம் பெருமைப்பட உலகத்தாரோடு இவற்றைப் பகிர்ந்து கொள்கிறோம். அதிகாரமாற்றத்தின் கலாச்சாரச் சின்னமாக விளங்கிய, இந்த மண்ணின் புனிதமான செங்கோல், பாரதத்தின் புதிய நாடாளுமன்றத்தில் முழு கண்ணியத்தோடும், கவுரவத்தோடும் நிறுவப்பட்ட வேளையில், நாடு முழுவதும் மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் உணர்ந்தது. கடந்த மூன்றாண்டுகளின் வருடாந்தர விழாவான காசி தமிழ் சங்கமம், பாரதத்தின் ஆன்மிக-புவியீர்ப்பு மையமான காசியோடு தமிழ் மக்களுக்கு இருந்து வரும் பல்லாயிரம் ஆண்டுக்கால பழமைவாய்ந்த கலாச்சாரத் தொடர்பிற்கு, புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

இது பாரத தேசத்தின் பொற்காலம். இது அதன் மறுமலர்ச்சியுகம். பத்தாண்டுகளுக்கு முன்னர், பலவீனமான ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்கிய நாம், இன்று உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக ஆகியிருப்பதோடு, விரைவில் உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாகவும் ஆக இருக்கிறோம். உலகின் மிகவேகமாக வளரும் பொருளாதாரமாக நாம் இருக்கிறோம். நமது நாட்டின் 25 கோடிக்கும் மேற்பட்ட நமது மக்கள் ஏழ்மையிலிருந்து, பத்தாண்டுகள் என்ற சாதனைக் காலத்தில் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

தமிழகத்தின் சுமார் 1.5 லட்சம் கோடி முத்ரா கடன் பயனாளிகளில், கிட்டத்தட்ட பாதி பேர் பெண்கள் தான். 2047-ம் ஆண்டுக்குள்ளாக, முழுமையாக வளர்ச்சியடைந்த, தற்சார்புடையதாக, நமது நாட்டை ஆக்குவோம் என்ற மனமார்ந்த உறுதிமொழியை நாம் ஏற்றிருக்கிறோம். இதுவே நமது முன்னோர்களின் கனவாக இருந்தது. இந்த தேசியக் குறிக்கோளில் எந்த சமரசமும் கிடையாது. இதை நிறைவேற்றிக் காட்டுவது நம் அனைவரின் குறிக்கோளாகும். இந்த தேசியக் குறிக்கோளில், நமது மாநிலமான தமிழகத்துக்கு ஒரு பெரிய பங்களிப்பு இருக்கிறது. ஆனால் இது நடப்பது போலத் தெரியவில்லை. முக்கியமான குறியீடுகளின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, நமது மாநிலம் சரிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

நமது அரசுப் பள்ளிகளில் இருக்கும் சுமார் 75 சதவீதம் மாணவர்களால், இரண்டாம் வகுப்புப் பாடப் புத்தகங்களைக் கூட, சரிவரப் படிக்க இயலவில்லை. என்பதோடு, 11 முதல் 99 வரையிலான இரண்டு இலக்க எண்களைக் கூட, அவர்களால் அடையாளம் காண முடிவதில்லை. இரண்டு இலக்க கூட்டல்-கழித்தல்களைக் கூட அவர்களால் செய்ய முடியவில்லை. அரசுப்பள்ளிகளில் பெரும்பாலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஏழைகள் படிப்பதால், அரசுப்பள்ளிகளில் கற்றலில் ஏற்பட்டிருக்கும் இந்த செங்குத்தான சரிவு, ஏழைகளின் எதிர்காலத்தை மேலும் ஆபத்துக்குள்ளாக்குவதோடு, நீண்டகால சமூக மற்றும் பொருளாதார அநீதி அவர்களுக்கு இழைக்கப்படுவதை இது மேலும் அதிகப்படுத்தும்.

உயர்கல்வியைப் பொறுத்தமட்டிலும் கூட, நிலைமை சிறப்பாக இல்லை. நமது 20 மாநில பல்கலைக்கழகங்களில், சுமார் 25 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் நிதிப்பற்றாக்குறை நிலவுகிறது. அவை மோசமான நிதிநெருக்கடியைச் சந்தித்து வருகின்றன, ஆசிரியர்களுக்கு ஊதியத்தைக் கூட அவற்றால் அளிக்க முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே, மாநில அரசிடமிருந்து அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நிதிப்பங்கீடு கிடைக்கப் பெறவில்லை. இதன் விளைவாக, பல பல்கலைக்கழகங்கள், 50 சதவீதத்துக்கும் குறைவான ஆசிரியர்களின் எண்ணிக்கையோடு செயல்பட்டு வருகின்றன.சென்னை பல்கலைக்கழகத்தில், 66 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன.

துணைவேந்தர்கள் இல்லாமை, பல்கலைக்கழகத்தை அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருகிறது. ஏனென்றால், உயர்கல்வித் துறையின் செயலர் அப்போது நடைமுறையில் துணை வேந்தராகிறார். ஏற்கமுடியாத, அற்பமான காரணங்களுக்காக, துணைவேந்தர்கள் நியமனத்தை நடக்க இயலாமல் செய்வது என்பது, பின்வாயில் வழியே பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி அதிகாரத்தைச் சிதைக்கும் தவறான வழியாகும். இதனால் கல்வித்தரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய வீழ்ச்சி காரணமாக, மேலும் மேலும் பலபட்டதாரிகளுக்கு வேலை கிடைக்காமை, ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானோர் பணியமர்த்தமுடியா நிலையில் உள்ளார்கள்.

ஆய்வுகளின் பொதுவான தர நிலைகள் மிகத் தாழ்ந்த நிலையில் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் நமது பல்கலைக்கழகங்கள் உருவாக்கும் 6,000-த்திற்கும் மேற்பட்ட முனைவர்களில், 5 சதவீதம் பேரால் கூட, தேசியத் தகுதித்தேர்வு (NET), அல்லது இளநிலை ஆய்வு மாணவர் நிலை (JRF)-க்கான குறைந்தபட்ச ஆய்வுத்தரத்துக்குத் தேர்ச்சி பெற முடியவில்லை. பல மில்லியன் மாணவர்களின் எதிர்காலம் அபாயத்தில் இருக்கிறது.

கல்வி நிறுவன வளாகங்களைச் சுற்றி நிலவும் சட்டவிரோதமான போதைப்பொருள் அச்சுறுத்தல் தீவிரமான கவலையை அளிக்கிறது. சர்வதேச போதைப்பொருள் கூட்டமைப்புகளோடு தொடர்புடைய, சக்திவாய்ந்த போதைப்பொருள் கும்பல்கள் நமது மாநிலத்தில் இயங்கி வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இளைஞர்களுக்கு போதைப்பொருள் விற்கும் போது, அடிமட்டத்தில் இந்தக் குற்றங்களில் ஈடுபடுவோர், சிலவேளைகளில் அமலாக்கப் பிரிவுகளால் பிடிக்கப்பட்டாலும், போதைப்பொருள் கூட்டமைப்புக்களை இயக்கி வரும் பெரும்புள்ளிகள் தொடப்படுவதில்லை. போதைப்பொருள் கூட்டமைப்புக்களின் முக்கியப்புள்ளிகள் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்படவில்லை என்று சொன்னால், பெருகி வரும் போதைப்பொருள் அபாயம், நமது எதிர்காலச் சந்ததிகளை அழித்துவிடும்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்கள், குறிப்பாக தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள், தமிழகத்தில் சீராக அதிகரித்து வருகின்றன. ஒருபுறம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வரும் வேளையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் மறுக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்களில் குற்றத்தீர்ப்பு, தேசிய சராசரியில் பாதியளவே இருக்கிறது.

2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில், மிகப்பெரிய கள்ளச் சாராய பெருந்துயர்கள், மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. சுமார் 100 பேர் இறந்தார்கள், பலநூறு குடும்பங்கள் கள்ளச் சாராயத்தால் நிலைகுலைந்து போயின. ஏழை மக்களின் மரணத்திலும், அழிவிலும் லாபம் அடையும் கள்ளச் சாராயத்தின் பெருமுதலைகள் சுதந்திரமாக இருக்கும் அதேவேளையில், கீழ்மட்டத்தில் இருக்கும் கையாட்கள் சிலர் மட்டுமே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தங்களுடைய வாழ்க்கையையே சமூகநீதியை நிலைநிறுத்த அர்ப்பணித்த இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜாவைப் போன்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மாபெரும் தலைவர்கள் பற்றிப் பெருமிதம் கொள்ளும் மாநிலத்தில், தாழ்த்தப்பட்ட மக்களின் மீது இத்தகைய கொடுமைகள் நடக்கின்றன.

சில ஆண்டுகள் முன்புவரை, தனியார் முதலீட்டாளர்களால் மிகவும் விரும்பப்பட்ட மாநிலமாக நமது மாநிலம் இருந்தது. ஆனால் இன்று முதலீட்டாளர்கள் தமிழகத்தை விடுத்து மற்ற மாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். 2021-22 ஆம் நிதியாண்டில், மாநிலங்களிலேயே அந்நிய நேரடி முதலீட்டை அதிக அளவில் ஈர்த்த 4-வது மாநிலமாக தமிழகம் இருந்ததோடு, 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவு முதலீட்டைப் பெற்றது.

2023-24 ஆம் ஆண்டில் நமது மாநிலம் 6-வது நிலைக்கு வீழ்ச்சி கண்டதோடு, 2.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவே முதலீட்டைப் பெற்றது. குறைந்து வரும் தனியார் முதலீடுகள், தொழில்கள் மற்றும் சேவைத் துறைகளின் வேகத்தைக் குறைத்திருக்கிறது. இது மாநிலத்தின் பொருளாதாரத்திற்கும், வேலைவாய்ப்பிற்கும் பாதகமான விளைவுகளை உண்டாக்கும். முதலீட்டாளர்களை அச்சுறுத்தும் காரணங்களை நாம் அகற்றியாக வேண்டும்.

நாட்டிலேயே மிக அதிக தற்கொலை வீதம் உடைய மாநிலமாக தமிழகம் இருக்கிறது. ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு சராசரி 12 தற்கொலைகள் என்பது தேசிய சராசரி. நமது மாநிலமான தமிழகத்திலோ, ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 26-க்கும் மேற்பட்ட தற்கொலைகள் என்ற நிலை இருக்கிறது. இது தேசிய சராசரியை விட இருமடங்குக்கும் அதிகமானது. நமது மாநிலத்தில் சுமார் 20,000 பேர்கள் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தமிழகம் தான் இந்தியாவின் தற்கொலைத் தலைநகரம் என்கிறார்கள். தீவிரமான சமூக மற்றும் பொருளாதார துயர் நிறைந்த சூழல், வளர்ச்சிக்கும் நீதிக்கும் எதிரானது. இதில் விரிவான உடனடி நடவடிக்கை தேவைப்படுகிறது.

2047-ல் வளர்ச்சியடைந்த பாரதமாக ஆகும் பாதையில் நமது தேசம் தன்னம்பிக்கையோடு பயணிக்கிறது. அதேநேரத்தில் உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் , சில சுயநலமிகளும், எதிரி சக்திகளும் நமது முன்னேற்றத்தின் வேகத்தைக் குலைக்க முயற்சி செய்து வருகிறார்கள். இனம், சமயம், மொழி, சாதிகளின் பெயரால் நமது சமுதாயத்தைப் பிளவுபடுத்தி, அதைச் சிதைக்க முயற்சி செய்கிறார்கள். தவறான, எதிர்மறை கூற்றுகள் வாயிலாக, நமது மக்களின் நெஞ்சுரத்தை பலவீனப்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள்.

நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீதும், அரசியல் சட்டபூர்வமாக நிறுவப்பட்ட அமைப்புகளின் மீதும், நமது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் பொய்யான கருத்துரைகளைப் பரப்பி வருகிறார்கள். இத்தகைய தேசவிரோதக்கூறுகளுக்கு எதிராக, விழிப்போடு இருக்க வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x