Published : 25 Jan 2025 01:40 PM
Last Updated : 25 Jan 2025 01:40 PM

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லவிருந்த வேலூர் இப்ராஹிம் கைது: போலீஸுடன் பாஜகவினர் தள்ளுமுள்ளு

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் தங்கியிருந்த பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிமை விடுவிக்கக்கோரி பாஜகவினர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லவிருந்த பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிமை போலீஸார் கைது செய்தனர். அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பாஜகவினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள பள்ளிவாசலில் வழிபாடு செய்வதற்காக பாஜக சிறுபான்மையினர் அணி தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் இன்று (சனிக்கிழமை) காலையில் செல்லவிருந்தார். அப்போது ஜெய்ஹிந்த்புரத்தில் விடுதியில் தங்கியிருந்தவரை மலைக்கு செல்லக்கூடாது என போலீஸார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலீஸாருக்கும் பாஜகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது பணியிலிருந்த உதவி ஆணையர் சூரக்குமாரிடம், மலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என பாஜகவினர் கோரிக்கை விடுத்தனர். அப்போது, வேலூர் இப்ராஹிம், ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனியின் புகைப்படம் மீது காலணியால் அடித்தார். பின்னர் போலீஸார் வேலூர் இப்ராஹீமை கைது செய்தனர். அவரை விடுவிக்கக்கோரி போலீஸாருக்கும், பாஜகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பாஜகவைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வேலூர் இப்ராஹீமை விடுவிக்கக்கோரியும் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய வாசலில் அமர்ந்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடுத்துநிறுத்தி கலைந்துபோகச் செய்தனர். இதனால் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x