Published : 23 Jan 2025 06:27 AM
Last Updated : 23 Jan 2025 06:27 AM
சென்னை: பட்டறை தொழிலாளி உயிரிழப்புக்கு காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழக காவல்துறையின் அலட்சியப்போக்கு காரணமாக, சென்னை ஆர்.கே.நகர் காவல்நிலையம் முன்பு ராஜன் என்கிற பட்டறை தொழிலாளி தீக்குளித்து உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
ராஜன் உயிரிழப்பு குறித்து அவரது உறவினர்கள் கூறுவது வேறு விதமாக உள்ளது. அதாவது, கடந்த மாத இறுதியில், ராஜன் மது அருந்திவிட்டு தெருவில் நின்று கொண்டிருந்தார். இதை வீடியோ எடுத்த காவலர் ஒருவர் அவரிடம் ரூ.3 ஆயிரம் கேட்டுள்ளார். பணம் இல்லை என்று கூறியதால், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் அவரது உறவினர்கள் காவல் நிலையம் சென்று ராஜனை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து ராஜன் வேலை செய்யும் பட்டறைக்குச் சென்று காவல் துறையினர் அவரை அவமானப்படுத்தி உள்ளனர். இதன் காரணமாகவே ஆர்.கே.நகர் காவல் நிலையம் முன்பு அவர் தீக்குளித்துள்ளார் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதன்மூலம் காவல் துறையினரின் நடவடிக்கைதான் பட்டறை தொழிலாளி உயிரிழப்புக்கு காரணம் என் பது தெளிவாகிறது. எனவே முதல்வர் ஸ்டாலின் இதில் தனி கவனம் செலுத்தி, ராஜன் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment