தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு

Published on

தென் தமிழகத்தில் இன்று (ஜன. 22) லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 86 டிகிரி பாரன்ஹீட், குறைந்தபட்ச வெப்பநிலை 69.8-71.6 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும்.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய மன்னார் வளைகுடா, மத்திய மேற்கு அரபிக் கடலின் மேற்குப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 35 முதல் 55 கி.மீ. வேகத்திலும், அதிகபட்சமாக 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in