Published : 16 Jan 2025 11:13 AM
Last Updated : 16 Jan 2025 11:13 AM
சென்னை: விசாரணை கைதி போலீஸ் பக்ருதீனை சென்னை புழல் சிறையில் இருந்து மதுரைக்கு மாற்ற கோரி அவரது தாய் அளித்த மனுவை 4 வாரத்தில் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு அத்வானி ரத யாத்திரையின்போது மதுரை திருமங்கலம் அருகே ஆலம்பட்டி தரைப் பாலத்தில் பைப் வெடி குண்டுகள் வைத்த வழக்கு, கடந்த 2013ம் ஆண்டு பாஜக மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்த சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் கைதான போலீஸ் பக்ருதீன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை கைதியாக சென்னை புழல் சிறையில் உள்ளார்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது தாய் செய்யது மீரா தாக்கல் செய்த மனுவில்,”புழல் சிறையில் தனிமையில் அடைக்கப்பட்டுள்ள எனது மகனை சிறைத் துறை அதிகாரிகள் தொடர்ந்து சித்ரவதை செய்து வருகின்றனர். சிறைக்குள் முறையாக அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. எனவே, தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கும் வகையில் புழல் சிறையில் இருந்து அவரை மதுரை மத்திய சிறைக்கு மாற்ற வேண்டும் ’ என்று கோரியிருந்தார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது அரசு தரப்பில், ‘சிறை மாற்றம் தொடர்பான அவரது மனு பரிசீலனையில் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘புழல் சிறையில் இருந்து மதுரைக்கு போலீஸ் பக்ருதீனை மாற்றுவது தொடர்பாக அளி்க்கப்பட்ட மனுவை சிறைத் துறை அதிகாரிகள் 4 வாரத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment