Published : 13 Jan 2025 01:24 AM
Last Updated : 13 Jan 2025 01:24 AM

அதிமுகவின் இடைத்தேர்தல் நிலைப்பாடு சரிவுக்கான புள்ளியாக அமையும்: திருமாவளவன்

அதிமுகவின் இடைத்தேர்தல் நிலைப்பாடு, அவர்களின் சரிவுக்கான புள்ளியாக அமையும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் துரை ரவிக்குமார் எம்.பி., எம்எல்ஏ-க்கள் சிந்தனைச் செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு, ஆளூர் ஷாநவாஸ் மற்றும் மூத்த நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். மாநில கட்சியாக விசிகவுக்கு அங்கீகாரம் கிடைத்ததையொட்டி முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: விசிக சார்பில் முதல்வரை நேரில் சந்தித்து திமுகவின் ஒத்துழைப்புக்கு ஆதரவுக்கு நன்றியை பகிர்ந்து கொண்டோம். இத்துடன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து பாடுபடுவோம் என்பதையும் தெரிவித்தோம். யுஜிசியின் புதிய விதிகள் மாநில உரிமைகளுக்கு எதிராக இருக்கிறது. இதை எதிர்த்து இந்திய அளவில் இண்டியா கூட்டணி எதிர்வினை ஆற்ற வேண்டும். குறிப்பாக இந்த விவகாரத்தில் முதல்வர் முன்முயற்சி மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தோம்.

டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை முற்றாக மத்திய அரசு கைவிட வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தினோம். முதல்வரும் பரிசீலிப்பதாக கூறியிருக்கிறார். இந்த சந்திப்பு மனநிறைவாக இருந்தது. அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகவே ஓய்வூதியத் திட்டம் தொடர்பான வரைவைக் கொண்டு வர தமிழக அரசு முயற்சிக்கிறது. இதை விசிக வரவேற்கிறது.

பொறுப்புள்ள எதிர்க்கட்சி தேர்தல் புறக்கணிப்பு என்ற நிலைப்பாடு எடுப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது அவர்களின் பலவீனத்தை வெளிப்படுத்துவதாகத்தான் அமையும். இதை எதிர்கொள்வது தான் அதிமுகவுக்கான சிறப்பு. ஆனால், விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு என இடைத்தேர்தல்களை புறக்கணிக்கின்றனர். இது மறைமுகமாக பாஜகவின் அரசியல் நிலைப்பாட்டுக்கு ஒத்துழைப்பதாக அமையும். அதிமுகவை பின்னுக்கு தள்ளி, தாங்களே 2-வது பெரிய சக்தி என பாஜக காட்டிக் கொள்வதற்காக அனைத்து முயற்சிகளையும் செய்கிறது. அதற்கு சாதகமாகவே அதிமுகவின் நிலைப்பாடு அமையும். இது எந்த வகையிலும் அதிமுகவுக்கு பயன் தராது. அதிமுக மீதான மக்களின் நன்மதிப்பு கடுமையாக பாதிக்கப்படும். இத்தகைய முடிவை அவர்கள் ஏன் எடுத்தார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இது அதிமுகவின் சரிவுக்கான புள்ளியாக அமையும்.

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு மட்டுமல்ல ஓபிசிக்கும் கிரீமிலேயர் கூடாது என்பதே விசிகவின் நிலைப்பாடு. தமிழக அரசு கிரீமிலேயர் நடைமுறைக்கு ஆதரவாக இருக்காது என நம்புகிறோம். அனைத்து தேர்தல்களிலும் இண்டியா கூட்டணியினர் ஒருவொருக்கொருவர் நாட்டின் நலன் கருதி இணக்கமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x