Published : 09 Jan 2025 12:16 AM
Last Updated : 09 Jan 2025 12:16 AM

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை - பெங்களூரு உட்பட 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக, சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூரு சிறப்பு ரயில் உள்பட 4 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகை வரும் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஜன.15-ம் தேதி மாட்டுப் பொங்கல், ஜன.16-ம் தேதி காணும் பொங்கல் ஆகிய பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக ஏற்கெனவே 4 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூரு சிறப்பு ரயில் உட்பட மேலும் 4 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:

கேஎஸ்ஆர் பெங்களூருவில் இருந்து ஜன. 10-ம் தேதி காலை 8.05 மணிக்கு சிறப்பு ரயில் (07319) புறப்பட்டு, அதேநாள் பிற்பகல் 2.40 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து ஜன. 10-ம் தேதி பிற்பகல் 3.40 மணிக்கு சிறப்பு ரயில் (07320) புறப்பட்டு, அதேநாள் இரவு 10.50 மணிக்கு கேஎஸ்ஆர் பெங்களூருவை அடையும்.

எஸ்எம்விடி பெங்களூருவில் இருந்து ஜன.10-ம் தேதி இரவு 10 மணிக்கு சிறப்பு ரயில் (06569) புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். மறுமார்க்கமாக, தூத்துக்குடியில் இருந்து ஜன.11-ம் தேதி மதியம் 1 மணிக்கு சிறப்பு ரயில் (06570) புறப்பட்டு, மறுநாள் காலை 6.30 மணிக்கு மைசூரை அடையும்.

திருவனந்தபுரம் - சென்னை: சபரிமலை மகரவிளக்கு பூஜை மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக, இரண்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து ஜன.15-ம் தேதி அதிகாலை 4.25 மணிக்கு சிறப்பு ரயில் (06058) புறப்பட்டு, அதேநாள் இரவு 11 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து ஜன.16-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு சிறப்பு ரயில் (06059) புறப்பட்டு, மறுநாள் இரவு 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரலை சென்றடையும்.

எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து ஜன.16-ம் தேதி மாலை 6.15 மணிக்கு சிறப்பு ரயில் (06046) புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து ஜன.17-ம் தேதி காலை 10.30 மணிக்கு சிறப்பு ரயில் (06047) புறப்பட்டு, அதேநாள் இரவு 11 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பை அடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது. இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x