Last Updated : 18 Dec, 2024 06:42 PM

 

Published : 18 Dec 2024 06:42 PM
Last Updated : 18 Dec 2024 06:42 PM

ஜமைக்கா நாட்டில் நெல்லையை சேர்ந்தவர் சுட்டுக்கொலை: உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர ஆட்சியரிடம் மனு

ஜமைக்காவில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட திருநெல்வேலியைச் சேர்ந்தவரின் உடலைப் பெற்றுத்தரக் கோரி அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருநெல்வேலி: திருநெல்வேலியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் ஜமைக்கா நாட்டில் கொள்ளையர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலை உடனடியாக சொந்த ஊருக்கு கொண்டுவர உதவ வேண்டும் என்று வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயனிடம் உறவினர்கள் இன்று (டிச.18) மனு அளித்தனர்.

தென்காசி மாவட்டம் சுரண்டையை சேர்ந்த சுபாஷ் அமிர்தராஜ் என்பவர் வட அமெரிக்காவின் ஜமைக்கா என்ற நாட்டில் பிராவிடன்ஸ் என்ற தீவில் லீ ஹை ரோடு பகுதியில் ஜேகே புட் அன்ட் சூப்பர் மார்க்கெட் என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் திருநெல்வேலி மீனாட்சிபுரத்தை சேர்ந்த விக்னேஷ் (35) சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். இந்நிறுவனத்தில் திருநெல்வேலி டவுனை சேர்ந்த சுந்தரபாண்டி, சுடலைமணி , ராஜாமணி ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்திய நேரப்படி 1.30 மணி அளவில் கொள்ளையர்கள் சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்துள்ளனர். அங்குள்ள பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்தபோது அங்கிருந்த விக்னேஷ், சுந்தரபாண்டி, சுடலை மணி ஆகிய 3 பேரும் தடுத்துள்ளனர். அப்போது அவர்கள் மீது கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் குண்டு காயம்பட்டு சம்பவ இடத்திலேயே விக்னேஷ் உயிரிழந்தார். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு மற்ற ஊழியர்கள் உடனடியாக வந்து பலத்த காயமடைந்த மற்ற இருவரையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ் அமிர்தராஜ் விக்னேஷின் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து விக்னேஷன் தந்தை நாகராஜன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட விக்னேஷின் உடலை சொந்த ஊருக்கு உடனடியாக போர்க்கால நடவடிக்கையில் கொண்டு வர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் மனு அளித்தனர். இதுதொடர்பாக தமிழக அரசு மூலம் இந்திய வெளியுறவுத் துறையை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது ஆட்சியர் உறுதி அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x