Last Updated : 16 Dec, 2024 07:28 PM

 

Published : 16 Dec 2024 07:28 PM
Last Updated : 16 Dec 2024 07:28 PM

சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடித்து வைப்பு - ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு 

ஆளுநர் ஆர்.என்.ரவி | கோப்புப்படம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் 6-வது கூட்டத் தொடரை முடித்து வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையின் ஆண்டுக்கான முதல் கூட்ம் மற்றும் 16 -வது சட்டப்பேரவைக்கான 6-வது கூட்டத் தொடர் கடந்த பிப்.12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று, பிப்.15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்தார். அத்துடன் அவை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.

தொடர்ந்து, பிப்.19-ம் தேதி தமிழக அரசின் 2024-25ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசுவும், 20-ம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். இரு பட்ஜெட்கள் மீதும் 22-ம் தேதி வரை விவாதம் நடத்தப்பட்டு, இறுதியில் அமைச்சர்கள் பதில் அளித்து நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டம் மொத்தமாக 7 நாட்கள் நடத்தப்பட்டது.

அதன்பின், துறைகள் தோறும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக 2-வது கூட்டம் , கடந்த ஜூன் 20 முதல் 29-ம் தேதி வரை 9 நாட்கள் நடத்தப்பட்டன. பேரவை விதிகள் படி பேரவையின் ஒரு கூட்டம் முடிவுற்றால், அடுத்த 6 மாதங்களில் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், கடந்த டிச.9 மற்றும் 10-ம் தேதிகளில் 6-வது கூட்டத்தொடரின் 3 வது கூட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையின் 6-வது கூட்டத்தொடரை முடித்து வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிவிக்கை தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதாக பேரவை செயலர் கி.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x