Published : 03 Dec 2024 06:54 PM
Last Updated : 03 Dec 2024 06:54 PM
திருத்தணி: ஆந்திர மாநிலம் - கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் மற்றும் மழைநீர் கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அவ்வாறு ஓடும் நீரில், பள்ளிப்பட்டு அருகே 3 தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவில் ஆந்திர மாநிலம் - சித்தூர் மாவட்டத்தில் கிருஷ்ணாபுரம் அணை உள்ளது. 199.27 மில்லியன் கன அடி கொள்ளளவுக் கொண்ட இந்த அணை, தமிழக- ஆந்திர எல்லைப் பகுதிகளில் பெய்த கன மழையால், முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து நேற்று இரவு 9 மணி முதல், இன்று அதிகாலை 5.50 மணிவரை விநாடிக்கு ஆயிரம் கன அடி உபரி நீரை ஆந்திர நீர் வளத் துறையினர் திறந்தனர். அவ்வாறு திறக்கப்பட்ட நீர், ஆந்திர, தமிழக பகுதிகளில் உள்ள குசா மற்றும் லவ ஆறுகள் வழியாக, திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியில் கொசஸ்தலை ஆற்றுக்கு இன்று அதிகாலையில் வந்தடைந்தது.
கிருஷ்ணாபுரம் அணை உபரி நீர் மற்றும் பள்ளிப்பட்டு பகுதியில் பெய்த மழையால் கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் நீர், பள்ளிப்பட்டு அருகே உள்ள நெடியம், சமந்தவாடா, கீழ்கால்பட்டடை ஆகிய இடங்களில் உள்ள 3 தரைப்பாலங்கள் மூழ்கின. பள்ளிப்பட்டு வட்டப்பகுதிக்கு வந்தடைந்த கிருணாபுரம் அணையின் உபரி நீர், தொடர்ந்து, ஆந்திர பகுதியான நகரி பகுதிக்கு சென்று, மீண்டும் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் புகுந்துள்ள இந்த நீர் திருத்தணி வட்டப்பகுதிகள் வழியாக பூண்டி ஏரியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆகவே,பள்ளிப்பட்டு, திருத்தணி வட்டங்களில் கொசஸ்தலை ஆற்றுக்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment