Published : 10 Nov 2024 05:20 PM
Last Updated : 10 Nov 2024 05:20 PM

விருதுநகருக்கு புதிய அணை, சிப்காட் உள்பட ரூ.603 கோடியில் திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

முதல்வர் ஸ்டாலின்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்துக்கு புதிய அணை, 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய சிப்காட் உள்பட் ரூ.603 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விருதுநகரில் ரூ.77 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் உட்பட்ட ரூ.101 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். அதன்பின் விருதுநகர் - திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் உள்ள பட்டம்புதூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டு இருந்த வெம்பக்கோட்டை அகழாய்வு, ஶ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பகம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் சிறப்புகள் குறித்த கண்காட்சியை முதல்வர் பார்வையிட்டார். நான் முதல்வன் திட்டத்தில் பயன்பெற்ற மாணவர்கள் மற்றும் கலைஞர் கனவு இல்லம், புதுமை பெண், தமிழ் புதல்வன், கலைஞர் மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு திட்டங்களின் பயனாளிகள் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

அப்போது விருதுநகர் மாவட்டத்துக்கு ரூ.603 கோடி மதிப்பிலான பல்வேறு சிறப்புத் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் விபரம் வருமாறு:

  • பட்டாசு விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி செலவுக்கான நிதியத்திற்கு ரூ.5 கோடி.
  • காரியாபட்டி, திருச்சுழி வட்டங்களில் உள்ள கண்மாய் மற்றும் அணைகளை மேம்படுத்த ரூ.17 கோடி. காரியாபட்டி தெற்காற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு ரூ.21 கோடி விருதுநகர் கவுசிகா நதி, அருப்புக்கோட்டை கஞ்சம்பட்டி கண்மாய் உட்பட பல்வேறு நீர்நிலைகளை சீரமைக்க ரூ.41 கோடி. காலிங்கபேரி, வெம்பக்கோட்டை, ஆனைக்குட்டம், கோல்வார்பட்டி அணைகளை மேம்படுத்த ரூ.23.30 கோடியும், அணைப்பகுதியில் பூங்கா அமைக்க ரூ.2.74 கோடி.
  • அருப்புக்கோட்டையில் 10 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் புதிய சிப்காட் அமைக்க ரூ.350 கோடி.
  • சிவகாசி மாநகராட்சியில் நவீன வசதியுடன் கூடிய மாநாட்டு அரங்கம் அமைக்க ரூ.15 கோடி.

> வத்திராயிருப்பு பிளவக்கல் அணை பூங்கா மேம்பாட்டிற்கு ரூ.10 கோடி, ராஜபாளையம் சாஸ்தா கோயில் அருவி மேம்பாட்டு பணிக்கு ரூ.1.70 கோடி.

  • விருதுநகர் நகராட்சியில் சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகளுக்கு ரூ.24.50 கோடி.
  • ராஜபாளையம் நகராட்சியில் மழைநீர் வடிகால் பணிக்கு ரூ.13 கோடியும், கோடை நீர்தேக்கத்தை மேம்படுத்த ரூ.5 கோடி.
  • அருப்புக்கோட்டை மழைநீர் வடிகால் பணிக்கு ரூ.3 கோடி, பூங்கா அமைக்க ரூ.1.5 கோடி.
  • விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி நகரில் உள்ள நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ரூ.47.5 கோடி.
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கழிப்பறை மற்றும் வாகன நிறுத்துமிடம் அமைக்க ரூ.2.10 கோடி.
  • வத்திராயிருப்பு, ராஜபாளையம் பகுதிகளில் உள்ள 22 கண்மாய்களை புணரமைக்க ரூ.18.10 கோடி என மொத்தம் 20க்கும் மேற்பட்ட திட்டங்கள் ரூ.603.44 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

மாவட்டத்தில் உள்ள இரு அமைச்சர்கள் விடுத்த கோரிக்கைகளின் படி இந்த திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளுக்கு விரைந்து அராசணை பெற்று, பணிகள் தொடங்குவதற்கு நீங்கள் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

விருதுநகர் வந்த முதல்வருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கரிசல் இலக்கிய படைப்பு புத்தகங்களின் தொகுப்பு மற்றும் விருதுநகர் முதலாவது புத்தக திருவிழா சின்னமான புத்தகம் வாசிக்கும் சாம்பல் நிற அணிலின் சிலை ஆகியவற்றை ஆட்சியர் ஜெயசீலன் பரிசாக வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x