ஆளுநர் ஆர்.என்.ரவி | கோப்புப்படம்
ஆளுநர் ஆர்.என்.ரவி | கோப்புப்படம்

“இணக்கமான விரிவான வளர்ச்சிக்காக...” - ஆளுநர் ஆர்.என்.ரவி ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்து

Published on

சென்னை: “2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதம் காண வழிவகுக்கும் தமிழ்நாட்டின் இணக்கமான விரிவான வளர்ச்சிக்காக உழைப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வோம்,” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக ஆளுநரின் சமூக வலைதளப் பக்கமான ராஜ்பவன் தமிழ்நாடு எக்ஸ் தளத்தில், “தமிழ்நாடு மாநிலம் உருவான தினத்தையொட்டி, நமது தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகளுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். தமிழ்நாடு தனது வளமான ஆன்மிகம், கலாசாரம், இலக்கிய பாரம்பரியம் கொண்ட பாரதத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை மகத்தான முறையில் வடிவமைத்துள்ளது. இந்த புனித பூமியின் முனிவர்கள், ஞானம் தேடுவோர், கவிஞர்கள் மற்றும் வீரம் மிக்க ஆட்சியாளர்கள் எல்லா காலங்களிலும், பாரதத்தின் ஆன்மாவை வளப்படுத்தி, அதன் அன்பு மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்தின் செய்தியை கடல் கடந்து கொண்டு சென்றுள்ளனர்.

இந்த மண்ணின் எண்ணற்ற தேசிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் அசைக்க முடியாத உறுதி மற்றும் அவர்களின் வீரமும், தியாகமும் நமது நாட்டின் சுதந்திரத்துக்கும் துடிப்பான ஜனநாயகத்துக்கு வழிவகுத்துள்ளன. இந்த நாளில், 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதம் காண வழிவகுக்கும் தமிழ்நாட்டின் இணக்கமான விரிவான வளர்ச்சிக்காக உழைப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வோம்,” என்று பதிவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in