Last Updated : 08 Jun, 2018 04:41 PM

 

Published : 08 Jun 2018 04:41 PM
Last Updated : 08 Jun 2018 04:41 PM

போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் கோடிக்கணக்கில் பணம் திருட்டு: அயர்லாந்து, டென்மார்க் உள்ளிட்ட வெளிநாட்டவரும் பாதிப்பு

பல வங்கிக் கணக்குகளில் இருந்து போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் கோடிக்கணக்கில் பணம் திருடிய வழக்கில் கைதாகியுள்ள சத்யாவிடமிருந்து பல வங்கிகளின் காசோலை புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முக்கியக் குற்றவாளியான சந்துருஜியை நெருங்கி விட்டதாக இன்று தெரிவித்துள்ள போலீஸார், இவ்வழக்கில் வெளிநாட்டவரும் ஏமாற்றப்பட்டுள்ளனர் என தெரிவித்தனர்.

புதுச்சேரியில் பல்வேறு வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் திருடப்படுவதாக போலீஸாருக்கு பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் வங்கிக் கணக்கிலிருந்து போலி ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் கொள்ளையடிக்கப்படுவதாக தெரியவந்தது.

நூதனத் திருட்டில் ஈடுபட்ட புதுச்சேரியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்த பாலாஜி, ஜெயச்சந்திரனை போலீஸார் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருட்டுக்குப் பயன்படுத்திய ஸ்கிம்மர், ஸ்வைப் இயந்திர சாதனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கடலூரைச் சேர்ந்த கமல் மற்றும் சென்னையைச் சேர்ந்த ஷ்யாம் ஆகியோரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதர மையத்தில் பணிபுரியும் தற்காலிக மருத்துவர் விவேக் என்பவருக்கு தொடர்பிருப்பதை அறிந்த போலீஸார் அவரையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

இவர்களில் பாலாஜி, மருத்துவர் விவேக் ஆகியோர் 2 முறை ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு அளித்தனர். ஆனால் 2 முறையும் அவர்களது ஜாமீன் மனு தள்ளுபடி ஆனது. இதனிடையே இவ்வழக்கில் முன்னாள் அதிமுக பிரமுகர் சந்துருஜி, என்ஆர் காங்கிரஸ் பிரமுகர் சத்யா ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இரண்டு பேரும் தலைமறைவாயினர். இந்த வழக்கில் சத்யாவிற்கு தொடர்பு இருந்ததாக வெளியான செய்தியால் சத்யாவின் திருமணமும் நின்றுபோனது.

மேலும் இதில் முக்கியக் குற்றவாளியாக புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சந்துருஜியை சிபிசிஐடி போலீஸார் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவித்து தேடி வருகின்றனர். அதையடுத்து சந்துருஜி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் ஏடிஎம் மோசடி வழக்கில் முக்கியக் குற்றவாளிகளுக்கு உதவிய சிவக்குமார், கணேஷ், டேனியல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் சந்துருஜி உதவியாளர் அப்துல் சமதுவும் கைதானார். இந்நிலையில் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான சத்யாவை முதலியார்பேட்டை பகுதியில் கைது செய்த சிபிசிஐடி போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கைதான சத்யாவிடம் நடத்திய விசாரணையில் ஸ்வைப்பிங் இயந்திரங்கள் ஐந்தை சந்துருஜியிடம் அவர் தந்துள்ளது தெரியவந்தது. மேலும் இயந்திரங்கள் தந்து அதன் மூலம் ரூ.3.25 லட்சம் கமிஷனாக பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் சத்யாவிடமிருந்து ரூ.1 லட்சம் ரொக்கம், பல வங்கிகளின் கணக்குப் புத்தகங்கள், காசோலை புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக எஸ்எஸ்பி ராகுல் அல்வால் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஏடிஎம் வழக்கில் முக்கியக் குற்றவாளியான சந்துருஜி இருக்கும் இடத்தை அடையாளப்படுத்தி நெருங்கியுள்ளோம். விரைவில் கைது செய்யப்படுவார். இவ்வழக்கில் இதுவரை பத்துபேர் வரை கைதாகியுள்ளார்கள். அவர்களின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் பல கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. உலகளாவிய தொடர்பு இருப்பதும் தெரிகிறது. மேலும் புதுச்சேரி, தமிழகம் என இந்திய அளவில் மட்டுமில்லாமல் பெல்ஜியம், அயர்லாந்து, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்தோரின் வங்கிக் கணக்கிலும் இவர்கள் மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x