Published : 30 Oct 2024 03:40 AM
Last Updated : 30 Oct 2024 03:40 AM
ராமநாதபுரம்/சென்னை: பசும்பொன்னில் இன்று நடைபெறும் தேவர் குரு பூஜை விழாவில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், பொதுமக்கள் மரியாதை செலுத்துகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை விழா கடந்த 28-ம் தேதி தேவர் நினைவிடத்தில் தொடங்கியது. நேற்று லட்சார்ச்சனை நடைபெற்றது. இன்று தேவர் குருபூஜை நடைபெறுகிறது.
தேவர் நினைவிடத்தில் இன்று காலை 9 மணிக்கு அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்துகிறார். இந்நிகழ்வில், துணை முதல்வர் உதயநிதிமற்றும் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், மு.பெ.சுவாமிநாதன், பி.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், அர.சக்கரபாணி, பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஸ், டி.ஆர்.பி.ராஜா மற்றும் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்துகின்றனர்.
அதேபோல, முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், சசிகலா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை, மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்துகின்றனர். இதையொட்டி, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில்10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பசும்பொன் முதல்கமுதி வரை 90 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல, போலீஸார் உடலில் அணியக்கூடிய 600 கேமராக்கள் மூலமும் கண்காணிப்புப் பணி நடைபெறுகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “முதல்வர் மு.க.ஸ்டாலின், தேவர் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கும், மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment