Published : 29 Oct 2024 05:42 AM
Last Updated : 29 Oct 2024 05:42 AM
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களை இயக்குமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் (அக்.31) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு சொந்த ஊர்களுக்கு செல்லும் விதமாக, வழக்கமான விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பாக முடிந்து, காத்திருப்போர் பட்டியல் வந்தது.
இதையடுத்து, 15-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களில் குறிப்பிட்ட மார்க்கங்களில் அக்.28, 29, 30 ஆகிய தேதிகளில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்தது. இதுபோல, மறுமார்க்கமாக, நவ.2, 3 ஆகிய தேதிகளில் சென்னைக்கு இயக்கப்படும் ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது.
குறிப்பிட்ட நாட்களில், தென் மாவட்டங்களுக்கு சென்று திரும்பும் ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுக்கு அதிக தேவை இருக்கிறது. இதையடுத்து, முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் பல ரயில்களில் கூடுதல் பெட்டிகளை சேர்க்க ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து கன்னியாகுமரி, செங்கோட்டை உட்பட தென் மாவட்டங்களுக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களை இயக்குமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலை நிமித்தமாகவும், உயர் படிப்புக்காக பெரும்பாலான தென்மாவட்ட மக்கள் சென்னையில் வசிக்கின்றனர். இவர்கள் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ஊருக்கு சென்று திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்தவகையில், தற்போது தீபாவளி பண்டிகைக்காக ஊருக்குச் செல்ல மக்கள் தயாராகி உள்ளனர். வழக்கமான விரைவு ரயில்கள், சிறப்பு ரயில்களில் முக்கிய நாட்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டது. எனவே, தென் மாவட்டங்களுக்கு சரியான நாட்களில் கூடுதல் சிறப்பு ரயில்களையும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களை அறிவிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “பயணிகளின் தேவையின் அடிப்படையில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுகின்றன. இதுதவிர, முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. சென்னை - ஈரோடு இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல, தென் மாவட்டங்களுக்கு முன்பதிவில்லாத ரயில் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment