Published : 28 Oct 2024 08:16 PM
Last Updated : 28 Oct 2024 08:16 PM

தவெக நிர்வாகிகள் இருவரின் உடலுக்கு புஸ்ஸி ஆனந்த் அஞ்சலி - உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு

திருச்சி உறையூர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தவெக நிர்வாகி கலைக்கோவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.

திருச்சி: தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு சென்றபோது விபத்தில் உயிரிழந்த அக்கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் இருவரின் உடலுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திங்கள்கிழமை நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, தவெக தலைவர் விஜய் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்து அக்கட்சி தொண்டர்கள் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டத்திலிருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கார், பஸ், வேன் மூலமாக சென்றனர். தவெக திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் உறையூர் நெசவாளர் காலனியைச் சேர்ந்த கலை (என்ற) கலைகோவன் (40), இளைஞர் அணி தலைவர் பெரியசெட்டித் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் (34) உள்ளிட்டோரும் காரில் விக்ரவாண்டி நோக்கி சென்றனர்.

செல்லும் வழியில் கார் விபத்தில் சிக்கியது. இதில் கலைக்கோவன், சீனிவாசன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவரது உடலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு திருச்சிக்கு இன்று கொண்டுவரப்பட்டு, அஞ்சலி செலுத்துவதற்காக அவரவர் இல்லங்களில் வைக்கப்பட்டிருந்தது. கலைக்கோவன் உறவினர்கள், உயிரிழந்த நிர்வாகிகளின் இறப்புக்கு விஜய் இரங்கல் தெரிவிக்காததற்கு வருத்தமும், கண்டனமும் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "கலைக்கோவன் சிறு வயது முதலே விஜய் ரசிகராக இருந்தவர். வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து விஜய் நற்பணி மன்றத்துக்கும், அவருடைய கட்சிக்கும் சிறப்பாக செயலாற்றி உள்ளார். கட்சி மாநாட்டுக்கு சென்றவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு மாநாட்டு மேடையில் அனுதாபம் கூடத் தெரிவிக்கவில்லை. இன்றும் கூட ஒரு அறிக்கைக் கூடக் கட்சித் தலைவர் வெளியிடவில்லை" என்றனர்.

உறையூர் இல்லத்தில் கலைக்கோவன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை முற்றுகையிட்ட கலையின் உறவினர்கள்.

இதற்கிடையே கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், உயிரிழந்த நிர்வாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று மாலை 3.30 மணியளவில் திருச்சிக்கு வந்தார். திருச்சி உறையூரில் கலைக்கோவன் உடலுக்கு பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அஞ்சலி செலுத்திவிட்டு, சீனிவாசன் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

முன்னதாக, கலை வீட்டுக்கு புஸ்ஸி ஆனந்த் அஞ்சலி செலுத்த வந்தபோது அவருடைய உறவினர்கள் சிலர் அவரை முற்றுகையிட்டு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் புஸ்ஸி ஆனந்தை மீட்டு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறும்போது "இறந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு கட்சித் தலைவர் அறிவுறுத்தலின் பேரில் நேரில் வந்து மரியாதை செலுத்தினேன். இவர்களது இழப்பு தவெகவுக்கு பேரிழப்பு. கட்சித் தலைவர் விஜய் இரங்கல் தெரிவிப்பார். இவர்களது குடும்பத்துக்கு தேவையான உதவிகளை தவெக செய்யும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x