Published : 28 Oct 2024 06:47 PM
Last Updated : 28 Oct 2024 06:47 PM

காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளால் தமிழ் மொழிக்கான நேர்முகத் தேர்வில் எப்படி தேர்ச்சி பெற முடியும்? - அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளால் எப்படி தமிழ் மொழிக்கான நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், வீட்டுவசதி வாரிய உதவி செயற்பொறியாளருக்கு தமிழ் மொழித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உதவி செயற்பொறியாளராக கடந்த 2014-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான வித்யாசாகர் என்பவர் தமிழ் மொழித் தேர்வுக்கான தேர்ச்சி சான்றிதழை வரும் நவம்பருக்குள் சமர்ப்பிக்காவிட்டால் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார் என ஏற்கெனவே அவருக்கு தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த வித்யாசாகர், ஆங்கில வழியில் பட்டப்படிப்பை முடித்த நிலையில் தமிழ் மொழிக்கான எழுத்துத் தேர்வில் பங்கேற்றதாகவும், ஆனால் நேர்முகத் தேர்வில் பங்கேற்கவில்லை என்பதால், தமிழ் மொழித் தேர்வுக்கான தேர்ச்சி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என தன்னை நிர்பந்திக்கக்கூடாது என்றும், இதற்காக தனது ஊதிய உயர்வை நிறுத்தி வைக்கக் கூடாது என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “கல்வி, வேலை வாய்ப்பு முதல் பொது சேவைகள், சுகாதாரம் வரை மாற்றுத் திறனாளிகளால் முழு பங்களிப்பையும் வழங்க முடியவில்லை. அவர்கள் சமூக, கலாச்சார, சுற்றுச்சூழல் ரீதியாக எதிர்கொள்ளும் தடைகளை புரிந்து கொண்டு, அவற்றை அகற்ற வேண்டும். சாதாரண நபர்களுக்கு விதிக்கும் நிபந்தனைகளை, மாற்றுத் திறனாளிகளுக்கும் விதித்து தேவையற்ற பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாய் பேச முடியாத மனுதாரரால் எப்படி தமிழ் மொழி தேர்வுக்கான நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள முடியும்? எனவே, தமிழ் மொழித் தேர்வுக்கான தேர்ச்சி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையில் இருந்து மனுதாரருக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் விலக்கு அளிக்க வேண்டும். மேலும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகளையும் தமிழக அரசு அவருக்கு வழங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x