Last Updated : 28 Oct, 2024 01:24 PM

3  

Published : 28 Oct 2024 01:24 PM
Last Updated : 28 Oct 2024 01:24 PM

“ரஜினி அரசியலுக்கு வராததால் விஜய்யை பாஜக களம் இறக்கியுள்ளதா?” - சபாநாயகர் அப்பாவு சந்தேகம்

பாபநாசம் அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக சபாநாயகர் அப்பாவு தண்னீர் திறந்துவைத்தார்.

திருநெல்வேலி: “நடிகர் ரஜினி அரசியலுக்கு வராத காரணத்தால் பாஜக தான் விஜய்யை இறக்கி இருப்பார்களோ? என்ற சந்தேகம் எழுகிறது. நடிகர் விஜய் வருமானவரித் துறை சோதனையில் சிக்கிய போது திமுக தான் அவருக்கு, ஆதரவாக குரல் கொடுத்தது.” என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று (அக்.28) தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “பாபநாசம் அணையில் இன்று திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் சுமார் 86,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயன்பெறுவார்கள். விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பிறகு 400 கோடி ரூபாயில் மூன்று லட்சம் டன் நெல்லை கொள்முதல் செய்யும் அளவுக்கு குடோன்கள் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே ரேஷன் கடைகளில் தரமான அரிசி தற்போது மக்களுக்கு கிடைக்கிறது.

நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்துள்ளனர். அந்த வரிசையில் அவரும் கட்சித் தொடங்கியுள்ளார். எனவே, அவருக்கு எனது வாழ்த்துக்கள். புஸ்ஸி ஆனந்த் பற்றி நிறைய விஷயங்கள் வருகிறது. அவர் புதுச்சேரியில் உள்ள பாஜக தலைவருடன் நெருக்கமாக இருப்பதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் நெருக்கமாக இருப்பதாகவும் தகவல்கள் வருகிறது. விஜய் தான் ஏ டீம், பி டீம் இல்லை என சொல்வதை வைத்துபார்க்கும் போது சந்தேகம் ஏற்படுகிறது.

திமுக குறித்து, பணம் சம்பாதிப்பதாக கூறி இருக்கிறார். புதிதாக கட்சி தொடங்கும் போது இந்த வார்த்தையை அவர் தவிர்த்து இருக்கலாம். புஸ்ஸி ஆனந்த் கிரிமினல், என்று விஜய்யின் தந்தையே சொல்லி இருக்கிறார். எனவே, ஒரு கிரிமனலை எப்படி அக்கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்தார் என்று தெரியவில்லை? ஒருவேளை கிரிமினல் இப்போது நல்லவராக மாறிவிட்டாரா? என்னவோ நடிகர் விஜய் வருமானவரித் துறை சோதனையில் சிக்கிய போது, குற்றவாளியை போல் வருமானவரித் துறை காரில் அழைத்து சென்றனர். அப்போது அவருக்கு ஆதரவாக திமுக தான் குரல் கொடுத்தது.

குற்றம் இருப்பதால்தான் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். எனவே, ஒருவர் மற்றவர்களை குறை சொல்லும் போது தான் உண்மையாக இருக்க வேண்டும். ஏற்கெனவே, பாஜகவில் இருந்து ரஜினியை அரசியலுக்கு கொண்டுவர முயற்சித்தார்கள். அவர் வரவில்லை, என்பதால் அவருக்கு பதிலாக விஜய்யை ஏற்பாடு செய்திருப்பார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. திமுக அரசு பல நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 75 ஆயிரம் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட இருக்கிறது. எனவே, இந்த அரசை எத்தனை விமர்சனங்கள் செய்தாலும் தாங்க கூடிய அரசாக, மக்கள் நலனுக்காக தொடர்ந்து செயல்படும்.” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x