Published : 28 Oct 2024 12:54 PM
Last Updated : 28 Oct 2024 12:54 PM

ரூ.1.55 கோடி செலவில் முத்துராமலிங்க தேவர் அரங்கம்: காணொலியில் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் 1 கோடியே 55 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள .முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தினை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.28) முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேவர் ஜெயந்தி விழாவின்போது, கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாத்திட, ஒரு நிரந்தர மண்டபம் அமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு வைத்த கோரிக்கையினை ஏற்று, பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தின் இரு நுழைவாயில்களிலும் ஆண்டுதோறும் தற்காலிகமாக அமைக்கப்படும் பந்தலுக்கு பதிலாக பொதுமக்கள் நலன்கருதி 1 கோடியே 55 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு மண்டபங்கள் தமிழக அரசால் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினால், 28.10.2023 அன்று அறிவிப்பு செய்யப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவரின் நினைவிடத்தில் 1 கோடியே 55 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள “தெய்வீகத் திருமகனார் உ. முத்துராமலிங்கத் தேவர் அரங்கம்”-ஐ முதல்வர் இன்றையதினம் திறந்து வைத்தார்.

இந்த அரங்கத்தின் மொத்த பரப்பளவு 9848.98 சதுர அடி ஆகும். இவ்வரங்கத்தில் பொதுமக்களுக்கான காத்திருப்பு கூடம் மற்றும் மிக முக்கிய பிரமுகர்களுக்கான நிரந்தர நிழற்கூரை ஆகியவையும், பொதுமக்களுக்கான காத்திருப்பு கூடத்தில் 500 ஆண்கள் மற்றும் 500 பெண்கள் தனித்தனியாக வரிசையில் செல்லும் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி, சுப நிகழ்ச்சிகள் நடத்திட மேடை வசதி, மின்விளக்கு மற்றும் மின்விசிறி வசதிகள் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பால்வளம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.இரா.வைத்திநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், செ.முருகேசன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x