Published : 27 Oct 2024 10:04 AM
Last Updated : 27 Oct 2024 10:04 AM

“திமுகவுக்கும், ஜனநாயகத்தும் தொடர்பில்லை” - பழனிசாமி விமர்சனம்

அதிமுக 53-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் காந்தி சாலையில் நேற்று நடைபெற்றது.  இதில் பங்கேற்றுப் பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி.

காஞ்சிபுரம்: ‘திமுகவுக்கும், ஜனநாயகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை, அந்தக் கட்சி ஒரு குடும்பத்துக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கப்பட்ட கட்சி’ என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் 53-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் காந்தி சாலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: எல்லா மாநிலத்திலும் ஒரு முதல்வர் தான் இருப்பார். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் 4 முதல்வர்கள் உள்ளனர். ஸ்டாலின் மட்டும் முதல்வராக இல்லை. அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் பலர் முதலமைச்சர் போல் செயல்படு கின்றனர்.

அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருந்த நான் பொதுச் செயலராக உள்ளேன். இதுபோல் வேறு எந்தக் கட்சியிலும் சாதாரண தொண்டன் உயர் பதவிக்கு வர முடியாது. திமுகவில் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே உயர் பொறுப்புக்கு வர முடியும். கடந்த அதிமுக ஆட்சியை மோசமான ஆட்சி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ஆனால் எங்கள் ஆட்சியில்தான் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன. விலைவாசி உயராமல், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொண்டோம்.

குடிமராமத்து பணிகள்: காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தில்தான் குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தோம். விவசாய பங்களிப்போடு இந்தத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத் தினோம். இந்த திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட வண்டல் மண்ணை விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயன்படுத்திக் கொண்டனர்.

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களைத் தான் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துகொண்டிருக்கிறார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ரூ.3.5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றி மட்டுமே மு.க.ஸ்டாலின் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். தனக்கு பிறகு தனது மகன் அதிகாரத்துக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார். தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சி நடைபெறவில்லை.

அதிமுக இருக்கும் வரை கருணாநிதி குடும்பத்தில் இருந்து யாரும் அரசு உயர் பொறுப்புக்கு வர முடியாது. மிசாவின் போது பாதிக்கப்பட்ட பலர் திமுகவில் உள்ளனர். அவர்களுக்கு திமுகவில் பதவியில்லை. கருணாநிதி குடும்பத்தில் பிறந்ததால் மட்டுமே உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகியுள்ளார். உதயநிதி மட்டும் அல்ல, அவரது மகன் இன்ப நிதி வந்தாலும் ஏற்போம் என்று ஒரு அமைச்சர் கூறுகிறார் திமுக ஒரு குடும்பத்துக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுக்கப்பட்டு விட்டது. இதனைக் கூறுவதற்கு கொஞ்சமாவது வெட்கப்பட வேண்டாமா?

இந்தியாவிலேயே சிறப்பான ஆட்சியை திமுக நடத்துவதாக ஸ்டாலின் கூறுகிறார். திமுகஆட்சி பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறையிலும் ஊழல்மலிந்துள்ளது. சிறப்பான ஆட்சி நடைபெறவில்லை. சிறப்பாக ஊழல்தான் நடக்கிறது. போதைப்பொருட்கள் நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு திமுக ஆட்சியில் மோசமான நிலையில் உள்ளது.

மக்கள் அதிமுக பக்கம்: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக நல்ல கூட்டணி அமைத்து போட்டியிடும். வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். திமுக அரசால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிமுகவின் பக்கம் உள்ளனர் என்றார். இந்த பொதுக்கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் வி.சோம சுந்தரம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பெஞ்சமின், மாநில அமைப்புச் செயலர்கள் வாலாஜா பாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு உள்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு முன் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அண்ணா சிலைக்கு பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x