Published : 27 Oct 2024 09:37 AM
Last Updated : 27 Oct 2024 09:37 AM

நெல்லை, குமரி, மதுரை, ஈரோடுக்கு தீபாவளி சிறப்பு ரயில் - முன்பதிவு தொடங்கியது

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, சென்னையில் இருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, ஈரோடுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று திரும்ப வசதியாக, சிறப்புரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், சென்னை யில் இருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, ஈரோடுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை - திருநெல்வேலி - திருநெல்வேலியில் இருந்து அக்.27-ம் தேதி மாலை 4 மணிக்கு ஏசி விரைவு சிறப்பு ரயில் (06074) புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடையும். மறுமார்க்கமாக, சென்ட்ரலில் இருந்து அக்.28-ம்தேதி பிற்பகல் 3 மணிக்கு ஏசி விரைவுசிறப்பு ரயில் (06073) புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

தாம்பரம் - மதுரை - மதுரையில் இருந்து அக்.29, 30, நவ.2 ஆகிய தேதிகளில் காலை 8.15 மணிக்கு சிறப்பு ரயில் (06076) புறப்பட்டு, அதேநாள் பிற்பகல் 3.25 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து அக்.29, 30, நவ.2 ஆகிய தேதிகளில் மாலை 5.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(06075), மறுநாள் அதிகாலை 1.20மணிக்கு மதுரை சென்றடையும்.

சென்னை - கன்னியாகுமரி - சென்னை சென்ட்ரலில் இருந்து அக்.27-ம் தேதி இரவு 11.25 மணிக்கு சிறப்பு ரயில் (06079) புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.45 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும்.மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து அக்.28-ம் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு சிறப்பு ரயில் (06080) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி இருக்கிறது.

முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: இதுதவிர, ஒரு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.இதன்படி ஈரோட்டில் இருந்து அக்.30, 31, நவ.3 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.55 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06094) புறப்பட்டு, அதேநாள் முற்பகல் 11.55 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். மறுமார்க்கமாக, சென்ட்ரலில் இருந்து அக்.30, 31, நவ.3 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06093), அதே நாள் இரவு 9.15 மணிக்கு ஈரோடு சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x