Published : 27 Oct 2024 05:54 AM
Last Updated : 27 Oct 2024 05:54 AM

பிரியங்கா காந்தியை ஆதரித்து வயநாடு தொகுதியில் நவ.2 முதல் தமிழக காங்கிரஸ் பரப்புரை

சென்னை: வயநாடு மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தியை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் வரும் 2-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை வாக்குசேகரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை: வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பிரியங்கா காந்தியை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டியது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் தலையாய கடமையாகும். இதன்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பிரியங்கா காந்தி வெற்றிக்காக தேர்தல் பணியாற்றிட எனது தலைமையில், முன்னாள் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை நியமித்துள்ளோம்.

இந்த குழு நவ. 2 முதல் தேர்தல் பரப்புரையின் இறுதி நாளான நவ. 11-ம் தேதி வரை வயநாடு தொகுதியில் தேர்தல் பணியாற்ற உள்ளது. எனது தேர்தல் பரப்புரை நவ.2, 3 ஆகிய தேதிகளில் தொடங்கும். பிரியங்கா காந்தி வெற்றிக்கு பணியாற்றிட விருப்பமுள்ள தமிழகத்தைச் சார்ந்த காங்கிரஸ் கமிட்டியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், முன்னணி அமைப்புகள், இதர துறைகள், பிரிவுகளின் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட கட்சியின் செயல்வீரர்கள் தமிழக காங்கிரஸ் நியமித்துள்ள தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும். இதற்காக விருப்பமுள்ள கட்சியினர் இதுகுறித்து கட்சி தலைமையகத்துக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x