Published : 27 Oct 2024 07:24 AM
Last Updated : 27 Oct 2024 07:24 AM

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

சேலம் / தருமபுரி: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 31,575 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 33,148 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 2,500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறும்போது, “காவிரி டெல்டா மாவட்டங்களில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அங்கு பாசனத்துக்கான தண்ணீர் தேவை குறைந்துள்ளது. எனவே, மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு 7,500 கனஅடியில் இருந்து 2,500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது” என்றனர்.

அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஒன்றரை அடிக்கு மேல் உயர்ந்தது. நேற்று முன்தினம் நீர்மட்டம் 102.92 அடியாக இருந்த நிலையில் நேற்று 104.76 அடியாக உயர்ந்தது. அதேபோல, நீர்இருப்பு 68.67 டிஎம்சி-யில் இருந்து நேற்று 71.14 டிஎம்சி-யாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 600 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை 7 மணி நிலவரப்படி விநாடிக்கு 31 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x