Published : 25 Oct 2024 06:38 PM
Last Updated : 25 Oct 2024 06:38 PM

5 தமிழக மீனவர்கள் விடுதலை: படகு ஓட்டுநருக்கு அபராதம் விதித்தது இலங்கை நீதிமன்றம்

ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் 5 பேரை விடுதலை செய்தும், படகின் ஓட்டுநருக்கு அபராதம் விதித்தும் இலங்கையில் உள்ள ஊர்காவல் துறை நீதிமன்றம் இன்று (அக்.25) உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து கடலுக்குச் சென்ற கலைவாணன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். அந்தப் படகிலிருந்த கே.ரமேஷ் (27), ஆர்.ஜானகிராமன் (27), டி.கிருஷ்ணன் (68), குமார் (40), உ.ரமேஷ் (51), ராஜ் (55) ஆகிய 6 மீனவர்களை அக்.9-ல், இலங்கைக் கடற்படை கைது செய்தது. இந்த 6 மீனவர்களின் நீதிமன்றக் காவல் இன்று (அக்.25) நிறைவடைந்தது.

இதையடுத்து, அவர்கள் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஷ்கரன், 5 மீனவர்களை மீண்டும் இலங்கை கடற்பகுதிக்குள் மீன்பிடித்தால் சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

மேலும், விசைப்படகு ஓட்டுநரான கே.ரமேஷ் என்பவருக்கு இலங்கை ரூ. 40 லட்சம் அபராதம் (இந்திய மதிப்பில் ரூ. 11,50,000) விதித்தும், அபராதத்தை கட்டத் தவறினால் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார். பின்னர், விடுதலை செய்யப்பட்ட 5 மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். படகின் ஓட்டுநரான கே.ரமேஷ் யாழ்பாணம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x