Published : 24 Oct 2024 08:35 PM
Last Updated : 24 Oct 2024 08:35 PM

தமிழக மீனவர்கள் 16 பேர் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 16 தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். ராமேசுவரம் மீன்பிடி இறங்கு தளத்திலிருந்து கடலுக்குச் சென்ற மகேந்திரன், ராமர்பாண்டி என்பவர்களுக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் ரோந்துப் பணியின் போது நேற்று (அக்.23) நெடுந்தீவு அருகே கைப்பற்றினர்.

படகுகளிலிருந்த மோகன், மகேந்திரன், ராம்குமார், மாரிகணேஷ், கண்ணன், அன்பரசன், முனீஸ் பிரபு, குருசெல்வம், பாண்டி, முத்துக்கருப்பையா, ராமபாண்டியன் , தங்கராஜ், ராஜு, ஆண்டனி பிச்சை, பூமிநாதன், சுந்தரபாண்டி ஆகிய 16 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி நளினி சுபாஸ்கரன் 16 மீனவர்களையும் நவம்பர் 6-ம் தேதி வரையில் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார். . தொடர்ந்து மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x