Published : 24 Oct 2024 04:23 PM
Last Updated : 24 Oct 2024 04:23 PM

“1 டிரில்லியன் பொருளாதார இலக்கை எட்டுவதில் பெண்கள் பெரும்பங்கு வகிப்பார்கள்” - அமைச்சர் கீதாஜீவன்

அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில் ஜவுளித்துறை சார்ந்த பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நிகழ்வில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டார்.

அவிநாசி: “தமிழகம் 1 டிரில்லியன் பொருளாதார இலக்கை எட்ட பெண்கள் பெரும்பங்காக இருப்பார்கள்,” என திருப்பூரில் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

ஜவுளித்துறை சார்ந்த பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தனியார் அமைப்புடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில் இன்று (அக்.24) நடந்த நிகழ்வில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேசியதாவது: “திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தனியார் நிறுவனத்துடன் இணைந்து 3 ஆண்டுகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த ஒப்பந்தம் போடப்பட்டு, தற்போது திருப்பூரில் துவங்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் பெண்களுக்கு சம வாய்ப்பை உருவாக்கும் வகையில், பணியிடத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் போற்றப்படும் போது, உலக பொருளாதாரத்தில் 20 சதவீதம் உயரும் என உலக வங்கியின் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பெண்கள் பணியாற்ற தடையாக இருப்பவற்றை அடையாளம் கண்டு அவற்றை அகற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வீட்டைவிட்டு வெளியூரில் பணியாற்றும் பெண்களுக்காக தோழி விடுதி திட்டம், கட்டணமில்லா பேருந்துப் பயணம் உள்ளிட்ட திட்டங்களால் பெண்கள் அந்த தொகையை சேமித்து தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பயன்படுத்துவதாக மாநில அரசின் திட்டக்குழு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு குடும்பத்தில், சமூகத்தில் மதிப்பு உயர்கிறது. மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் தமிழ்நாடு முழுவதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பெண்கள் வேலை செய்யும் பணியிடங்களில் உள்ளக புகார் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 22 ஆயிரத்து 345 அரசு மற்றும் தனியார் பணியிடங்களில், இந்த புகார் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இங்குள்ள தொழில் நிறுவனங்கள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. பாலின சமத்துவம் பற்றி சமூகத்தில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பெண்களுக்கு கவுன்சலிங், சட்ட உதவி உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறை, வன்கொடுமை இல்லாத சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும். ஜவுளித்துறையை மேம்படுத்திக் கொண்டே, சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை நாம் வளர்த்துக் கொள்ளலாம். முதலமைச்சரின் கனவான 2030-ம் ஆண்டு தமிழ்நாட்டின் 1 டிரில்லியன் பொருளாதார இலக்கை, எட்ட பெண்கள் முக்கிய அங்கமாக இருப்பார்கள்,” என்று அவர பேசினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: “போக்சோ சட்டம் குறித்து தீவிர விழிப்புணர்வு சமூகத்தில் ஏற்பட்டுள்ளது. 1098-க்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன. காவல்துறை, கல்வித்துறை மற்றும் சமூகநலத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தை நேய தமிழகமாக இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. போக்சோ வழக்கில் கைது செய்யப்படுபவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு, கடந்த 3 ஆண்டுகளில், ரூ. 84 கோடியே 91 லட்சம் நிவாரணத்தை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது,” என்று அவர் கூறினார். இந்நிகழ்வில், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சமூகநலன் மகளிர் உரிமைத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன், ஐநா சபைக்கான இந்திய பிரதிநிதி சூசன் பெர்கசன், கைத்தறி மற்றும் கைத்திறன் துணி நூல் துறை செயலர் அமுதவல்லி, சமூகநலத்துறை ஆணையர் லில்லி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் மற்றும் தனியார் தொண்டு நிறுவன பிரதிநிதிகள், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x