Published : 24 Oct 2024 03:51 PM
Last Updated : 24 Oct 2024 03:51 PM

தீபாவளியின் போது ஆம்னி பேருந்துகளை கட்டண உயர்வின்றி இயக்க நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: தீபாவளி பண்டிகையின் போது ஆம்னி பேருந்துகளை கட்டண உயர்வின்றி இயக்குவதாக பேருந்து உரிமையாளர்கள் உறுதியளித்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கூறியுள்ளார்.

தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை கட்டுக்குள் வைப்பது தொடர்பாக சென்னை, கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரகத்தில் அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில், போக்குவரத்து ஆணையர் சுன்சோங்கம் ஜடக்சிரு, கூடுதல் ஆணையர் சிவகுமரன், இணை ஆணையர் செந்தில்நாதன், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் அன்பழகன், திருஞானம், அப்சல், முத்துக்குமார், மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: “தீபாவளியையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல அரசு பேருந்துகள் ஏற்பாடு செய்வது மட்டுமில்லாமல், ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் சுமூக பயணம் மேற்கொள்ளும் வகையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்த முதல்வர் உத்தரவிட்டார். கடந்த ஆண்டைப் போலவே கட்டண உயர்வின்றி, தீபாவளியையொட்டி பொதுமக்கள் பயணம் செய்ய உதவுவதாக உரிமையாளர்கள் உறுதியளித்துள்ளனர்.

அதேநேரம், கடந்த ஆண்டை விட முன்பதிவு குறைந்திருப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர். கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும்போது, போக்குவரத்து நெரிசலின்றி செல்லும் வகையில் காவல்துறை மூலமாகவும், சுங்கச்சாவடிகளில் தாமதம் ஏற்படாத வண்ணம் கட்டணமின்றி செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். சுங்கச்சாவடியை பொறுத்தவரை நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அந்த வகையில் பேருந்துகள் தீபாவளிக்கு முன் செல்லும் போதும் பண்டிகை முடிந்து வரும்போதும் நெரிசல் இல்லாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். ஆம்னி பேருந்துகளைத் தொடர்ந்து இயக்கும் உரிமையாளர்கள் கட்டணத்தை உயர்த்துவதில்லை. சங்கத்தின் தொடர்பு இல்லாமல், புதிதாக பேருந்துகளை இயக்குவோர் கட்டணத்தை உயர்த்துகின்றனர்.

இது தொடர்பாக 1800 425 6151 எண்ணில் பெறப்படும் புகார்களின் அடிப்படையில் கட்டணத்தை திருப்பிச் செலுத்துதல், விதிமீறலுக்கான அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும். புதிய ஆம்னி பேருந்து நிலையம் திறக்கும் வரை, அவரவர் பணிமனையில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவை 400 அடி புறவழிச்சாலை வழியாக செல்லும். பொதுமக்களுக்கான வசதிகளை செய்து கொடுக்கும் கடமை அரசுக்கு இருக்கிறது.

அந்த வகையில் கூடுதல் பேருந்துகள் இயக்குவதோடு, தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையிலும் இயக்குகிறோம். இதைத் தவிர, சொகுசு பயணத்துக்காக ஆம்னி பேருந்துகளை பொதுமக்கள் நாடுகின்றனர். அவர்கள் புகாரளிப்பதில்லை. அனைத்து செயலிகளையும் அரசு கண்காணிக்க முடியாது. மக்களின் அனைத்து பிரச்சினையையும் சேர்த்து கவனிக்க வேண்டிய இடத்தில் தான் அதிகாரிகள் இருக்கின்றனர். எனவே, புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கிடையே, அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு அதிகரித்துள்ளது" என்று அமைச்சர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x