Published : 23 Oct 2024 05:19 PM
Last Updated : 23 Oct 2024 05:19 PM

இலங்கை சிறையிலிருக்கும் 35 நாட்டுப் படகு மீனவர்களை விடுவிக்கக் கோரி பாம்பனில் தர்ணா

பாம்பனில் தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மீன்வளத்துறை மற்றும் காவல்துறையினர்.

ராமேசுவரம்: இலங்கை சிறையிலிருக்கும் 35 நாட்டுப் படகு மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்கள் இன்று பாம்பனில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ், சூசை மார்டின் ஆகியோருக்கு சொந்தமான நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றிய இலங்கைக் கடற்படையினர் அதிலிருந்த 35 மீனவர்களையும் எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் ஆகஸ்ட் 8-ம் தேதி கைது செய்தனர்.

இந்த நிலையில், செப்டம்பர் 10-ம் தேதி இலங்கை புத்தளம் நீதிமன்றம், இந்த நான்கு படகுகளில் ஒரு நீளமான நாட்டுப் படகிலிருந்த 12 மீனவர்களுக்கு தலா இலங்கை ரூ.35 லட்சம் அபராதமும், மற்ற மூன்று நாட்டுப் படகிலிருந்த 23 மீனவர்களுக்கு தலா இலங்கை ரூ.10 லட்சம் அபராதமும் என 35 நாட்டுப் படகு மீனவர்களுக்கு இலங்கை ரூ.6.5 கோடி (இந்திய மதிப்பில் ரூ 1.85 கோடி) அபராதம் விதித்தது.

அபராதத்தை கட்டத் தவறினால் மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. நீதிமன்ற தீர்ப்பின் படி அபராதம் கட்டாததால் 35 பாம்பன் நாட்டுப்படகு மீனவர்களும் புத்தளம் மாவட்டத்தில் உள்ள வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த 35 மீனவர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்கள், பாம்பன் மீன்வளத்துறை அலுவலக வளாகத்தில் இன்று காலை தர்ணாப் போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து, மீனவ குடும்பங்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x