Last Updated : 23 Oct, 2024 04:50 PM

 

Published : 23 Oct 2024 04:50 PM
Last Updated : 23 Oct 2024 04:50 PM

“எவ்வளவு மழை பெய்தாலும் அரசு மருத்துவமனைகளில் தண்ணீர் தேங்கக்கூடாது”-ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: “எவ்வளவு மழை பெய்தாலும் அரசு மருத்துவமனைகளில் தண்ணீர் தேங்கக்கூடாது,” என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த வெரோணிக்கா மேரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் ‘மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். தற்போது ரூ.315 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இருப்பினும் மருத்துவமனையில் இருந்து மருத்துவக் கழிவுகள் மற்றும் கழிவு நீர் வெளியேற, கழிவுநீர் வடிகால் வசதி முறையாக செய்யப்படவில்லை.

இதனால், மருத்துவமனை வளாகத்தில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. மருத்துவமனையில் போதுமான காத்திருப்பு அறை வசதியும், கழிப்பறை வசதியும் இல்லை. வார்டுகள் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை. எனவே, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முறையான கழிவு நீர் கால்வாய்களை அமைக்கவும், போதுமான கழிப்பறைகளை கட்டுவதோடு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை போல வார்டுகளை தினமும் சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், அரசு ராஜாஜி மருத்துவமனையில் கழிவுநீர் தேங்கி இருப்பது தொடர்பான புகைப்படம் சமர்ப்பிக்கப்பட்டது. அரசு தரப்பில், “தற்போது மழை பெய்து வரும் நிலையில், தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளது. அதை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், “எவ்வளவு மழை பெய்தாலும் மருத்துவமனைகளில் தண்ணீர் தேங்கக்கூடாது. அதற்கான நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். இந்த மனு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலர், மருத்துவக் கல்வி இயக்குநர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை நவ.4-க்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x