Published : 23 Oct 2024 03:43 PM
Last Updated : 23 Oct 2024 03:43 PM

பிடிஎஸ் சேர்க்கை வழங்கப்பட்டுள்ள புதுச்சேரி மாணவியை எம்பிபிஎஸ் கலந்தாய்வில் அனுமதிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: புதுச்சேரியில் பல் மருத்துவ படிப்பில் சேர்க்கை வழங்கப்பட்டுள்ள மாணவிக்கு, எம்பிபிஎஸ் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டுமென புதுச்சேரி மாநில சென்டாக் குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் புதுச்சேரி வில்லியனூரைச் சேர்ந்த பட்டியலின மாணவி ஸ்ரீநிஷா தாக்கல் செய்திருந்த மனுவில், ‘புதுச்சேரியில் கடந்த 1964-ம் ஆண்டுக்கு முன்பாக பிறந்த பட்டியலினத்தவர்களுக்கு பூர்வகுடி பட்டியலினம் என்றும், அதன்பிறகு பிறந்தவர்களுக்கு புலம்பெயர்ந்த பட்டியலினத்தவர் என்றும் வகைப்படுத்தி சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது.

எனது தாயார் புதுச்சேரியைச் சேர்ந்தவர். தந்தை சென்னையைச் சேர்ந்தவர். இந்த கல்வியாண்டுக்கான புதுச்சேரி மாநில மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வுக்கு பட்டியலினப் பிரிவில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தேன்.

இந்நிலையில் புலம்பெயர்ந்த பட்டியலினத்தவர்களுக்கான பிரிவில் பல் மருத்துவ படிப்புக்கு எனக்கு இடம் கிடைத்துள்ளது. எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பில் சேர்க்கை வழங்கப்படவில்லை. வில்லியனூர் வட்டாட்சியர் தற்போது எனது தாயாரின் பிறப்பு உள்ளிட்ட ஆவணங்களின் அடிப்படையில் பூர்விக பட்டியலினம் என சாதி சான்றிதழ் வழங்கியுள்ளார். அந்த சாதிச் சான்றிதழின் அடிப்படையில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி, மருத்துவ படிப்புகளுக்கான இடங்களுக்கு ஏற்கெனவே கலந்தாய்வு முடிந்து, தகுதிப்பட்டியல் தயார் செய்யப்பட்டுவிட்ட நிலையில் இந்த கோரிக்கையை ஏற்க முடியாது, எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஸ்ரீநிஷா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு ஆஜராகி, “தகுதிப்பட்டியல் வெளியான பின்னரும் கூட உரிய ஆவணங்களை தாக்கல் செய்யும் பட்சத்தில் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கலாம் என்ற புதுச்சேரி உயர் கல்வி மாணவர் சேர்க்கைக்கான சென்டாக்கின் விதியை கருத்தில் கொள்ளாமல், தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்” என வாதிட்டார்.

புதுச்சேரி அரசு தரப்பில், “ஸ்ரீநிஷா புலம்பெயர்ந்த பட்டியலினத்தவர்களுக்கான சாதிச்சான்றிதழ் அளித்ததன் அடிப்படையில் தான் அவருக்கு பல் மருத்துவ படிப்புக்கு இடம் ஒதுக்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், மாணவி ஸ்ரீநிஷா தாமதமாக விண்ணப்பித்து இருந்தாலும் அவரது சாதி சான்று உள்ளிட்ட ஆவணங்களை பரிசீலித்து எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என புதுச்சேரி சென்டாக் குழுவுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x