Published : 23 Oct 2024 11:26 AM
Last Updated : 23 Oct 2024 11:26 AM

ரூ. 28 கோடி லஞ்சம் பெற்றதாக வழக்கு | முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். சட்ட விரோத பணப் பரிவர்த்தனையில் அவர் ஈடுபட்ட புகாரின் அடிப்படையில் சோதனை என தகவல் கிடைத்துள்ளது.

தஞ்சாவூர் - ஒரத்தநாடு பகுதியில் உள்ள அவரது வீடு, சென்னை சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் உள்ள அவரது அறை, அவரது மகனின் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்க ரூ.27.90 கோடி லஞ்சம் வாங்கியதாக வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், அமலாக்கத் துறையினர் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

2011 முதல் 2016 காலக்கட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். சென்னை பெருங்களத்தூரில் 2016-ல் தனியார் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு திட்ட அனுமதி கோரியபோது, அப்போது அமைச்சராக இருந்த வைத்திலிங்கத்துக்கு ரூ.27.90 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாக, அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

அதில், லஞ்சப் பணம் வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முகபிரபு ஆகியோர் இயக்குநர்களாக இருக்கும் நிறுவனத்துக்கு கடனாக வழங்கப்பட்டதுபோல கணக்கு காட்டப்பட்டுள்ளது. அந்த பணத்தில் பல இடங்களில் சொத்துகளை வாங்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரணை நடத்தி, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது மகன்கள் பிரபு, சண்முகபிரபு, தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பன்னீர்செல்வம், ரமேஷ் உள்ளிட்ட 11 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான இவர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x