Last Updated : 22 Oct, 2024 06:25 PM

 

Published : 22 Oct 2024 06:25 PM
Last Updated : 22 Oct 2024 06:25 PM

கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு 20% போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று (அக்.22) வெளியிட்ட செய்திக் குறிப்பு: போனஸ் சட்டத்தின் கீழ், வரும் தலைமைக் கூட்டுறவு சங்கங்கள், மத்திய கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கப்படக்கூடிய உபரித் தொகையை கணக்கில் கொண்டு அச்சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 சதவீதம் மிகை ஊதியம் (போனஸ்) வழங்கப்படும். உபரி தொகை இல்லாமல் உள்ள சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏதுவாக 10 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

மேலும் பணியாளர்கள் மற்றும் தொழிற் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று முதல் முறையாக குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் பணிபுரிந்து போனஸ் சட்டத்தின் கீழ் வராத சங்கங்களாக இருப்பினும் நிகர லாபம் ஈட்டும் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். போனஸ் சட்டத்தின் கீழ் வராத நிகர லாபம் ஈட்டாத தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்கள் இருப்பின் அவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரமும், தொடக்க சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.2,400 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள தலைமை கூட்டுறவுச் சங்கங்கள், மத்திய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் 43,683 பணியாளர்களுக்கு ரூ. 44.42 கோடி மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மிகவும் ஊக்கத்துடன் பணியாற்றுவதுடன் எதிர்வரும் விழாக்காலங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x