Last Updated : 22 Oct, 2024 05:33 PM

 

Published : 22 Oct 2024 05:33 PM
Last Updated : 22 Oct 2024 05:33 PM

கைதிகள் - வழக்கறிஞர்கள் சந்திப்பு குறித்த டிஜிபி சுற்றறிக்கைக்கு எதிராக மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை: சிறை கைதிகள் - வழக்கறிஞர்கள் சந்திப்பு தொடர்பாக டிஜிபி பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை திரும்ப பெறக் கோரி மதுரையில் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக சிறைகளில் கைதிகளை சந்தித்து பேசும் வழக்கறிஞர்களில் சிலரின் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படியாக உள்ளதால் வக்காலத்தில் குறிப்பிட்டுள்ள வழக்கறிஞர்களை மட்டும் இனி கைதிகளை சிறையில் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என டிஜிபி சங்கர் ஜிவால் காவல்துறை அதிகாரிகளுக்கு சமீபத்தில் சுற்றிக்கை ஒன்றை அனுப்பினார். அதில், சில வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலை தவறாகப் பயன்படுத்துவதாகவும், குற்றவாளிகளுடன் நெருங்கிய உறவு ஏற்படுத்திக் கொள்ளுதல், கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை வழங்குதல், போலியான ஆவணங்கள் தயாரித்தல், கட்டப்பஞ்சாயத்து செய்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாகவும் டிஜிபி கூறியிருந்தார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து இந்த சுற்றறிக்கையை திரும்ப பெறக் கோரி நீதிமன்ற மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு வழக்கறிஞர் சங்க பொறுப்பு தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.

இது தொடர்பாக மோகன்குமார் கூறுகையில், “டிஜிபி-யின் சுற்றறிக்கை அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. சிறை விதிகளில் ஒரு கைதியை வழக்கறிஞர் இத்தனை முறை தான் பார்க்க வேண்டும் என குறிப்பிடப்படவில்லை. சிறையில் கைதிகளை வழக்கறிஞர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் சந்திக்கலாம், வழக்கு தொடர்பான விளக்கங்களை கோரலாம் என்றுதான் சிறை விதிகளில் கூறப்பட்டுள்ளது. டிஜிபி-யின் சுற்றறிக்கை அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. ஆகவே, சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x